குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் பெண்

Posted January 31, 2015 by Adiraivanavil in Labels:
கும்பகோணத்தில் குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் பெண்கும்பகோணத்தில் வசிக்கும் பாரதி புதுமை பெண்ணாக வலம்
வருகிறார்.
ஆட்டோ ஓட்டுனராக அவர் வேலை பார்ப்பதற்கு பின்னணியில் ஒரு சோக கதை உள்ளது. கும்பகோணம் அருகே உள்ள 38 மகாராஜபுரத்தை சேர்ந்த மகாராஜா–வசந்தா ஆகியோரின் மகள் பாரதி. இவருக்கும் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த முருகானந்தத்துக்கு 1997ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களின் இனிய இல்லறத்தின் அடையாளமாக தீபிகா, சண்முகப்பிரியா, புனிதா என்ற பெண் குழந்தைகளும், சூரிய நாகேஸ்வரன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தனர்.

இந்த நிலையில் பாரதியின் வாழ்வில் புயல் வீச தொடங்கியது. அவரது அன்பு கணவர் முருகானந்தம் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 10–ந்தேதி மரணம் அடைந்தார். இதில் வாழ்க்கை கேள்விகுறியான நிலையில் கணவரின் ஆட்டோவை வாடகைக்கு விட்டு குடும்ப செலவை சமாளிக்க முயன்றார் பாரதி. அதில் சொற்ப வருமானமே கிடைத்ததால் தானே ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டார் பாரதி. அவரது செயலை கண்டு எள்ளி நகையாடியவர்கள் அவரது மன உறுதியை கண்டு வியப்பு அடைந்தனர். அச்சமின்றி அதே சமயம் விபத்தின்றி பாரதி ஆட்டோ ஓட்டி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற தொடங்கினார். சிலர் பொறாமையால் வதந்திகளை பரப்பி அவரது மன உறுதியை குலைக்க முயன்றனர்.
 
ஆனால் குழந்தைகளின் நல்வாழ்வே முக்கியம். வதந்தியை புறக்கணித்ததால் அது காணாமல் போய்விடும் என்பதை உணர்ந்த பாரதி கடும் உழைப்பை கொடுத்து அதில் கிடைக்கும் வருமானம் மூலம் தனது மாமியார் மற்றும் குழந்தைகளை பாதுகாத்து வருகிறார். தனது குழந்தைகள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதில் பாரதி தனிகவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது மூத்த மகள் தீபிகா பிளஸ்–2 படித்து வருகிறார். 3–வது மகள் புனிதா குத்துசண்டை மற்றும் கால்பந்து வீராங்கனையாக திகழ்கிறார். அவர் மாநில, மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறார். பாரதியின் குழந்தைகளுக்கு சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவிபுரிந்து வருகிறார்கள்.


0 comment(s) to... “குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் பெண்”