பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பாண்டம் தயாரிப்பு பணி மும்முரம்- (படங்கள் இணைப்பு)

Posted January 12, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமம் என்றாலே மண்பாண்ட தொழிலுக்கு பெயர் பெற்ற பகுதி. அந்த அளவுக்கு இப்பகுதி தொழிலாளிகளின் கையில் உருவாக்கப்படும் பலவிதமான மண்பாண்ட பொருட்களை கண்டு பலரும் வியந்து போன வரலாறும் உண்டு. இப்பகுதியில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்களை முத்துப்பேட்டை பைப்பாஸ் சாலை முதல் ஆலங்காடு கடைத்தெரு வரை சாலை ஓரங்களில் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்காக வைத்துள்ளனர். அதனை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து அப்பகுதியில் செல்லும் மக்கள் வாகனங்களை நிறுத்தி வாங்கி செல்கிறார்கள். அதனால்
தினந்தோறும் அந்த சாலை மண்பாண்டம் வியாபாரம் கலைக்கட்டி நிற்கும். தற்பொழுது பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால் சொல்லத்தேவையில்லை. ஆண்டு தோறும் பணிகள் தொடர்ந்து நடந்தாலும் பொங்கல் பண்டிகைக்காக கூடுதலாக மண்பானை, சட்டிகள், மடக்குகள், அடுப்புகள் ஆகியவை அதிகளவில் தயாரிக்கப்படுவது வழக்கம். இங்கு தயாராகும் மண்பாண்டங்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கும்பக்கோணம், காரைக்கால், நாகப்பட்டடினம் போன்ற வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி பைக்கப்படுகிறது. இங்கு மண்பானை வகைகள், மண் உண்டியல், பனியாரச்சட்டி, விளக்குகள், அலங்கார குடிநீர்; பானை, தொட்டிகள், மற்றும் பொம்மைகள் போன்றவைகளும் தயாரிக்கப்படுகிறது. அதற்கென தனிச் சிறப்பும் உண்டு. சென்ற ஆண்டு மழை மற்றும் இயற்கை மாற்றங்களால் மண் தட்டுப்பாடு ஏற்பட்டு உற்பத்தி குறைந்தது. ஆறுகளில் மண் எடுக்க கடுமையான கெடுப்புடியாக உள்ளதால் வெளி பகுதியிலிருந்து மணல்களை எடுத்து வரும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக மணலில் தயாரிக்கும் பொருள் அல்ல. இதில் மணல் மற்றும் படுகை மண்ணை சரிப்பாதியாக கலந்து பக்குவப்படுத்தி பலறும் மிதித்து அதிலிருந்து கிடைக்கும் பக்குவம் அடைந்த மண்ணைக் கொண்டு இந்த மண் பாண்டங்கள் செய்யப்படுகிறது. பின்னர் அவற்றை வெளியில் உலர்த்தி பின்னர் சூழையில் வைத்து எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் அதற்கு படும் கஷ்டங்கள் அதிகம். தற்பொழுது அதற்கு தேவையான தேங்காய் மட்டை, வைக்கோல் போன்ற பொருட்களும் விலை ஏற்றம் அடைந்துள்ளதால் மண்பாண்டம் விலைகளும் சற்று விலை அதிகரித்துள்ளது. பொங்கலுக்கு 70 சதவீதம் பேர் மண்பாண்டங்களைதான் பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனை நம்பி தற்பொழுது இப்பகுதியில் இந்த ஆண்டு ஏராளமான மண் பாண்டங்களை மும்முரமாக தயாரித்து நீண்ட வரிசையாக இப்பகுதியில் அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் தொழிலாளர்கள் நினைத்த அளவிற்கு வியாபாரங்கள் இந்த ஆண்டு இல்லை என்பதால் பெரும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து தொழிலாளர் நடராஜன் கூறுகையில்: இந்த ஆண்டு நினைத்த அளவுக்கு வியாபாரம் இல்லை என்று கவலையுடன் தெரிவித்தார். இது குறித்து தொழிலாளர் ரவி கூறுகையில்: இப்பகுதியில் மண் எடுக்க கட்டுப்பாடு உள்ளது. அதனால் இலவசமாக கிடைத்த மண் உட்பட அனைத்து பொருட்களும் விலை கொடுத்துதான் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்களும் விலையை உயர்த்தி உள்ளோம். எங்களுக்கு மணல் எடுக்க அரசு அனுமதித்தால் தொழிலை பாதிப்புயின்றி செய்வோம். இங்கிருந்து தயாரிக்கப்படும் மண் பாண்டங்கள் வெளி மாநிலத்திற்கு கூட செல்கிறது. இப்பகுதியில் நாங்கள் தயாரிக்காத பொருட்களை மானாமதுரையிலிருந்து நாங்கள் வாங்கி வரப்பட்டு இப்பகுதி மக்களுக்கு விற்பனை செய்கிறோம். அங்கே எல்லாம் மிசின் மூலம் தயார் செய்யப்படுகிறது. இப்பகுதியில் முழுக்க முழுக்க தொழிலாளர்களின் கை உழைப்பிலேயே பொருட்கள் தயாரிக்க படுகிறது என்றார். இன்னும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில தினங்களே இருப்பதால் இப்பகுதியில் தேங்கி இருக்கும் மண்பாண்டங்களை கொண்டு சென்று விற்பனை செய்ய லாரிகளில் தற்பொழுது ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது.

படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை











0 comment(s) to... “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பாண்டம் தயாரிப்பு பணி மும்முரம்- (படங்கள் இணைப்பு) ”