தஞ்சையில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டிய அ.தி.மு.க. பிரமுகர்
Posted December 14, 2016 by Adiraivanavil in Labels: தஞ்சை
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கோவில் கட்டி உள்ளார். இந்த கோவிலில் 24 மணி நேரமும் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு கோவில்
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் 6-ந்தேதி அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மேலும் புகழ்சேர்க்கும் வகையில் தஞ்சை மாநகர அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை துணைத்தலைவரும், தஞ்சை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான சுவாமிநாதன் மேலவீதியில் கோவில் கட்டி உள்ளார்.
எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த போது முதன் முதலாக தஞ்சை மேலவீதியில் தான் அவருக்கு சிலைவைக்கப்பட்டது. அந்த சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே 130 சதுரடி பரப்பளவில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. “புரட்சித்தலைவி அம்மா ஆலயம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த கோவிலில் ஜெயலலிதாவின் பொன்மொழிகளுள் ஒன்றான “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
1½ அடி உயர வெண்கல சிலை
இந்த கோவிலின் கருவறையில் ஜெயலலிதாவின் 1½ அடி உயர மார்பளவு வெண்கல சிலை நிறுவப்படுகிறது. இதற்காக தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் சிலை செய்யப்படுகிறது. இந்த சிலை இன்னும் 25 நாட்களில் தயார் செய்யப்படும். இந்த கோவிலில் தற்போது ஜெயலலிதா உருவப்படம் வைக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் உருவப்படம் ரூ.17 ஆயிரம் செலவில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் 5 அடி உயரம், 4 அடி அகலத்துடன் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 அடி நீளம், 1½ அடி உயரத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர். படமும் இந்த கோவிலில் வைக்கப்படுகிறது. இந்த 3 படங்களும் கோவிலின் கருவறையில் ஜெயலலிதாவின் சிலை வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அரைஅடி உயர பீடத்தின் பின்புறம் வைக்கப்படுகிறது. திறப்பு விழா நடைபெறும் அன்று 1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் அணையா விளக்கும் அமைக்கப்படுகிறது. மேலும் 24 மணி நேரமும் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களும் ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தலும் கோவில் முன்பு அமைக்கப் படுகிறது. இந்த கோவில் ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
பிறந்த நாளில் நிறுவப்படும்
இது குறித்து கோவில் கட்டிய அ.தி.மு.க. பிரமுகர் சுவாமிநாதன் கூறுகையில், “ஜெயலலிதா மறைவு என்னை மிகவும் பாதித்தது. நான் 1990-ம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க.வில் இருந்து வருகிறேன். 19-வது வார்டு செயலாளர், வட்ட பிரதிநிதி பதவியிலும் இருந்துள்ளேன். தற்போது ஜெயலலிதா பேரவை துணைத்தலைவராகவும், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி, மாவட்ட கூட்டுறவு அச்சக இயக்குனராக உள்ளேன். சாதாரண தொண்டனான எனக்கு ஜெயலலிதா பதவி கொடுத்து அழகு பார்த்தவர். மேலும் ஜெயலலிதாவை சந்தித்த போது, மக்களுக்கு நல்லதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். அந்த எண்ணம் தான் தற்போது அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்படி கடந்த 7-ந்தேதி முதல் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. வெண்கலசிலை தயாராக இன்னும் 25 நாட்கள் ஆகும். இந்த சிலை ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி கோவிலில் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comment(s) to... “தஞ்சையில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டிய அ.தி.மு.க. பிரமுகர்”