அதிரையில் 13,19, வார்டுகளில் குவிந்து கிடக்கும் குப்பையால் தொற்று நோய் அபாயம் :
Posted December 08, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்ற பேரூராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 13, 19, ஆகிய வார்டு தக்வா பள்ளி பின்புறம் மற்றும் வாய்க்கால் பள்ளி அருகே உள்ள பகுதிகளில் சாலையில் சிதறும் குப்பைகள் அள்ளப்படாததால் துர் நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த வழியில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மலைபோல் குவியும் குப்பையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் முகம் சுழிக்கச் செய்வதுடன், நாற்றம் தாங்க முடியாமல் பள்ளி, கல்லூரிக்கு விரைந்து மூக்கை பிடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் செய்தும் நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறியதாவது:
இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை கொண்டு கொட்டுகின்றனர். அதை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் துர்நாற்றம் வீசி அப்பகுதியில் குடியிருப்போர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். போதாதற்கு மாடுகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ,மாணவிகள் நாற்றம் தாங்கமுடியாமல் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவலம் உள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண குப்பைகளை அகற்றி சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்துக்கு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 comment(s) to... “அதிரையில் 13,19, வார்டுகளில் குவிந்து கிடக்கும் குப்பையால் தொற்று நோய் அபாயம் :”