சிமெண்டு விலை உயர்வை கண்டித்து கட்டுமான பொறியாளர்கள் பேரணி

Posted January 07, 2015 by Adiraivanavil in Labels:


அகில இந்திய கட்டுனர் சங்கம் மற்றும் கட்டுமான பொறியாளர்கள் மற்றும் எழிற்கலைஞர்கள் சங்கம், கட்டுமான தொழிலாளர் சங்கங்கள் ஆகியவை சார்பில் சிமெண்டு விலை உயர்வை கண்டித்து தஞ்சையில் நேற்றுகாலை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு அகில இந்திய கட்டுனர் சங்க தஞ்சை மைய தலைவர் சோமசுந்தரபாரதி, கட்டுமான பொறியாளர்கள் மற்றும் எழிற்கலைஞர்கள் சங்க தஞ்சை மைய தலைவர் ஜான்கென்னடி ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் பத்மநாபன், லெனின், என்.டி.பாலசுந்தரம், ராஜகோபால், மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிமெண்டு உற்பத்தியாளர்களின் நியாயமற்ற விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். கட்டுமான பொருட்களின் கடுமையான விலைஉயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அம்மா சிமெண்டு திட்டத்தை எல்லா மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும். நியாயமான விலையில் மணல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு கட்டுப்பட மறுக்கும் தனியார் சிமெண்டு ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
இதில் ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ. கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அய்யப்பன், மனோகர், சுரேஷ், பிரபு, பாண்டியன், ராஜசேகர், வைத்தியநாதன், ரவிச்சந்திரன் மற்றும் கட்டுமான பொறியாளர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இவர்களில் தொழிலாளர்கள் சிலர், சிமெண்டு மூட்டை போன்று துணியால் செய்யப்பட்டதை தோளில் தொங்கவிட்டு வந்தனர். தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி தஞ்சை பனகல் கட்டிடத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டரிடம் மனு
பின்னர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரும் வேலைவாய்ப்பை அளிக்கும் தொழிலாக கட்டுமான தொழில் விளங்குகிறது. அதுமட்டுமின்றி அரசுக்கு வருவாய் சேர்க்கக்கூடிய ஒரு தொழிலாகவும் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான பொறியாளர்கள், கட்டுனர்கள் மற்றும் 80 லட்சத்திற்கு மேலான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இந்த தொழில் விளங்கி வருகிறது. கடந்த ஒரு மாதகாலமாக இந்த தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணியாக இருப்பது சிமெண்டு விலையில் ஏற்பட்டிருக்கக்கூடிய கடுமையான விலைஉயர்வாகும்.
50 கிலோ எடை கொண்டு ஒரு மூட்டை சிமெண்டு கடந்த மாதம் ரூ.270–க்கு விற்கப்பட்டது. அதன் தற்போதைய சந்தை விலை ரூ.390 ஆகும். எந்த வித காரணமும் இன்றி சிமெண்டு விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சிமெண்டு ஆலை அதிபர்கள் தமக்குள் கூட்டணி அமைத்து கொண்டு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை நாளுக்குநாள் கடுமையாக உயர்த்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினத்தந்தி


0 comment(s) to... “சிமெண்டு விலை உயர்வை கண்டித்து கட்டுமான பொறியாளர்கள் பேரணி”