பலம் தரும் மூலிகை உணவுகள்: தூதுவளை கீரை
Posted January 19, 2015 by Adiraivanavil in Labels: வானவில் மருத்துவம்
தூதுவளை கொடி வகையை சார்ந்த தாவரம். கத்திரி பூ நிறத்தில் பூக்கும். இலைகளிலும், கொடிகளிலும் முட்கள் இருக்கும். வேலிகளில் படர்ந்து வளரும். இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவகுணம் வாய்ந்தது. மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
காது கேட்கும் திறன் மந்தமாக இருத்தல், காதுவலி, உடல் நமைச்சல், உடல் வலி, விந்து குறைபாடு, சுவாச நோய் போன்றவைகளை குணப்படுத்தும்தன்மை தூதுவளைக்கு இருக்கிறது என்று, பதார்த்த குண சிந்தாமணி பாடல் கூறுகிறது.
சித்த மருத்துவத்தில் தூதுவளை அதிகம் பயன்படுத்தப் படுகிறது. சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் காது, தொண்டை நோய்களுக்கு தூதுவளை சிறந்த மருந்தாகிறது. தூதுவளை உடலுக்கு உறுதியையும், சக்தியையும் அளிக்கும் காயகற்ப மூலிகை வகையை சார்ந்தது.
இலைகள் முக்கோண வடிவில் முட்களுடன் காணப்படும். முட்களை கவனமாக சிறு கத்திரிகோல் கொண்டு நீக்கிவிட்டு, பயன்படுத்தவேண்டும். இலைகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தூது வளையில் உள்ள இயற்கையான தாவர ஊக்கிகள் நோய்க்கு விரைவாக நிவாரணம் தருகிறது. கல்லீரல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளை சிறப்பாக இயங்கச் செய்கிறது. நுண்கிருமிகளால் நோய் ஏற்படுவதையும் தடுக் கும். ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
தூதுவளை சூரணம், தூதுவளை நெய், தூதுவளை லேகியம் ஆகியவை இதில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இவை இருமல், காசநோயை குணமாக்கும். பசியின்மை, காது, தொண்டை நோய்களை போக்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தூதுவளை பழத்தில் உள்ள விதைகளை விதைப்பதன் மூலம் தூதுவளை செடிகள் வளரும். இதை எளிதாக தொட்டிகளில் வளர்க்கலாம். அதிக பராமரிப்பு தேவையில்லை.
தூதுவளை கீரையில் தயார் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவுகள்:–
துவையல்
தூதுவளை கீரை – 100 கிராம்
சிறிய வெங்காயம் – 50 கிராம்
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
பெருங்காய தூள் – ½ தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு மற்றும் புளியை வறுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கிய பின்பு தூதுவளை கீரையை இட்டு கிளறுங்கள். அதில் தேங்காய் துருவல் உப்பு, பெருங்காயதூள் கலந்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
தூதுவளை துவையல் ருசியானது. இட்லி, தோசைக்கு ஏற்றது. சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து, இந்த துவை யலையும் பிசைந்து சாப்பிடலாம். அரிசிக் கஞ்சிக்கும் இது அதிக ருசி சேர்க்கும்.
சளி, இருமல், ஆஸ்துமா, தொண்டை வலி, காதுவலி, காது அடைப்பிற்கு நல்ல மருந்து.
சூப்
தூதுவளை கீரை – 50 கிராம்
புளி – சிறிய எலுமிச்சைப்பழ அளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி – ½ தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயபொடி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
கடுகு – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
பாத்திரத்தில் புளியை கரைத்து நன்கு கொதிக்க வையுங்கள்.
மிக்சியில் சீரகம், மிளகு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து, கொதிக்கும் புளிக் கலவையில் கலந்து சிறு தீயில் கொதிக்க வையுங்கள். அதில் தூதுவளை கீரை மற்றும் பூண்டுவை அரைத்து கலந்து, 2 நிமிடம் கொதிக்கவிடுங்கள். நெய்யில் கடுகு தாளித்து அதில் சேர்க்கவேண்டும்.
இதை சூப்பாக குடிக்கலாம். ரசமாக சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்றவைகளுக்கு இது ஏற்றது. பனி காலத்தில் ஏற்படும் தொண்டை கட்டுக்கு இது சிறந்த நிவாரணியாகும்.
அடை
தூதுவளை கீரை – 100 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
துவரைபருப்பு – 50 கிராம்
கடலை பருப்பு – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு – தேவைக்கு
பெருங்காய பொடி – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். தண்ணீரை வடிகட்டி எடுத்து அவைகளோடு காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயபொடி ஆகியவைகளை கலந்து மிக்சியில் நன்றாக அரையுங்கள். மாவை இரண்டு மணி நேரம் புளிக்க வையுங்கள்.
அடை செய்ய தொடங்கும்போது தூதுவளை கீரையை அரைத்து மாவுடன் கலந்து அடையாக தயார் செய்யுங்கள். குழந்தைகள் இதை ருசித்து சாப்பிடுவார்கள். சளி, இருமல் நீங்கும்.
கற்பம்
தூதுவளை கீரை – 500 கிராம்
மிளகு – 20 கிராம்
பனங்கற்கண்டு – 2 தேக்கரண்டி
பால் – 200 மி.லி.
செய்முறை:
தூதுவளை கீரையை நிழலில் உலரவைத்து, மிளகுடன் சேர்த்து அரைத்து தூளாக்கி, ஈரப்பதம் இல்லாத பாட்டிலில் அடைத்துவைத்துக்கொள்ளுங்கள்.
தினமும் காலை, இரவு வேளைகளில் இந்த பொடியை 1 தேக்கரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து பருகவேண்டும்.
இந்த பானம் நுரையீரலுக்கு பலத்தை தரும். உடல் உறுதியை உண்டாக்கும்.
கீரை துவட்டல்
தூதுவளை கீரை – 200 கிராம்
சிறிய வெங்காயம் – 50 கிராம்
(சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்)
பூண்டு – 5 பல்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு – 50 கிராம்
உப்பு – தேவைக்கு
நெய் – 3 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டுவை வதக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதில் தூதுவளை கீரையை இட்டு நன்றாக கிளறுங்கள். அத்துடன் வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, மிளகுதூள் கலந்து, சிறிதளவு நீரும் விட்டு வேகவையுங்கள்.
இந்த கீரை துவட்டலை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இது நுரையீரலின் நுண்ணிய காற்றறைகளை பலப்படுத்தும். உடல் உள்ளுறுப்புகளை பலப்படுத்தி வலிமையையும், பலத்தையும் தரும்.
டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)
நன்றி தினத்தந்தி
1 comment(s) to... “பலம் தரும் மூலிகை உணவுகள்: தூதுவளை கீரை”