தானாக தீப்பிடித்து எரிந்த குழந்தையின் தம்பிக்கும் அதே பாதிப்பு

Posted January 16, 2015 by Adiraivanavil in Labels:
மயிலம் அருகே தானாக தீப்பிடித்து எரிந்த குழந்தையின் தம்பிக்கும் அதே பாதிப்பு
மயிலம் அருகே உள்ள நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணா. கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு நர்மதா (வயது 3), ராகுல் (2) ஆகிய குழந்தைகள் உள்ளன. 


ராகுல் பிறந்த சில மாதங்களில் அவனது உடலில் தானாக தீப்பற்றியது. இதனால் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதன்பிறகும் அடிக்கடி அவனது உடலில் தீப்பற்றியது. இது பெரும் மர்மமாக இருந்தது. இதனால் அவனை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அவன் உடலில் தீப்பற்றியதற்கான காரணம் கடைசி வரை கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. 

இந்த நிலையில் தாயார் ராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த 9–ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. நேற்று வீட்டில் இருந்து போது திடீரென அந்த குழந்தையின் தொடை பகுதியில் தீப்பிடித்து காயம் ஏற்பட்டது. உடனே மயிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தாயாரை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. என்ன காரணத்திற்காக தீப்பிடிக்கிறது என்பதை இதுவரை டாக்டர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. 

மீண்டும் தீ பிடித்து விடாமல் தடுக்க நர்சுகள் அருகிலேயே இருந்து கண்காணித்தபடி உள்ளனர். இதற்கு முன்பு ராகுல் உடலில் தீப்பிடித்தபோது அவனது உடலில் இருந்து தீப்பற்றி எரியும் வாயு ஒன்று தானாக உருவாவதாகவும், அதனால் தான் தீப்பிடிக்கிறது என்று சென்னை டாக்டர்களில் ஒருவர் கூறினார். ஆனால் இதுபற்றி ஆய்வு நடத்திய டாக்டர்கள் அப்போது குழந்தையின் உடலில் எந்த வாயுவும் உருவாகவில்லை என்று கூறினார்கள். ஆனால் அவனுடைய தம்பி உடலில் தானாக தீப்பற்றி எறிவதால் உண்மையிலேயே எரிவாயு உடலில் இருந்து உருவாகலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தாயார் ராஜேஸ்வரி கூறியதாவது:– 

எனது 2–வது மகனின் உடலில் ஏற்கனவே அடிக்கடி தீப்பிடித்ததால் பிரச்சினையில் சிக்கி தவித்தோம். சென்னையில் சிகிச்சை அளித்த பிறகு எந்த பிரச்சினையும் இல்லை. எனது 3–வது குழந்தை 9–ந் தேதி பிறந்தது. நல்ல ஆரோக்கியமாக இருந்தான். நேற்று 3 மணி அளவில் குழந்தையை தரையில் பாயில் கிடத்தி விட்டு குளியல் அறைக்கு சென்றேன். அப்போது திடீரென குழந்தை சத்தம் போட்டு அழுதது. உடனே ஓடி வந்து பார்த்தேன். அவனது இரு தொடை பகுதியிலும் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. அவனது இடுப்பில் அணிந்து இருந்த துணியிலும் தீப்பிடித்து எரிந்து இருந்தது. 

உடனே அவனை நெடிமோழியனூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். டாக்டர் முதலுதவி சிகிச்சை அளித்தார். குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார். ஆனாலும் விழுப்புரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தார். எனவே இங்கு கொண்டு வந்து சேர்த்தோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

நெடிமோழியனூரில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பாரதிதாசன் கூறியதாவது:– 

குழந்தையை என்னிடத்தில் 3–45 மணியளவில் கொண்டு வந்தார்கள். இரு தொடைப் பகுதியிலும் காயம் இருந்தது. சாதாரணமாக பட்ட தீக்காயம் போல இருந்தது. அதற்கு உரிய சிகிச்சை அளித்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தேன். அந்த குழந்தையை வீட்டில் உள்ள மற்றவர்கள் எடுத்து வைத்து இருந்த போது தீப்பிடிக்கவில்லை. தாயார் பராமரிப்பில் இருக்கும் போது மட்டும் தான் தீப்பிடிக்கிறது. எனவே தாயாரையும் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என கருதுகிறேன். 

ஏற்கனவே முதல் குழந்தை உடலில் தீப்பிடித்த போது அதை பரிசோதித்த சென்னை டாக்டர்கள் தீப்பிடிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். எனவே தாயாரை பரிசோதனை செய்ய வேண்டியது முக்கியமானதாகும். இது பற்றி எங்கள் தலைமை டாக்டர் மீராவிடம் தெரிவித்து இருக்கிறோம். 
நன்றி மாலைமலர்



0 comment(s) to... “ தானாக தீப்பிடித்து எரிந்த குழந்தையின் தம்பிக்கும் அதே பாதிப்பு”