பட்டுக்கோட்டையில் நகர்மன்றக் கூட்டம்:திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

Posted January 31, 2015 by Adiraivanavil in Labels:



பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பட்டுக்கோட்டை நகர்மன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது உறுப்பினர்கள் நடத்திய விவாதம்:
எஸ்.ஏ.ஆர். ரகுராமன் (திமுக):
நகராட்சி திட்டப் பணிகளின் அவசர அவசியத்தைக் கருதி, குறைவான விலை விகிதம் கொடுத்துள்ள ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தப்புள்ளிகள், மதிப்பீட்டை விட 5 சதவீதம் கூடுதலாக இருந்தாலும் அதை மன்றம் ஏற்கலாம் எனக் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறி வெளிநடப்பில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்துக்கு பின்னர், அவர்கள் மன்ற விவாதத்தில் பங்கேற்றனர்.
பி.சி. ராஜேந்திரன் (திமுக): எனது வார்டிலுள்ள ரேஷன் கடையில் அத்தியாவசியப் பொருள்களை வெளிமார்க்கெட்டில் விற்கிறார்கள்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த வாரம் 2 முறை கொசுமருந்து அடிக்க வேண்டும்.
கே.வி.ஆர். திருச்செந்தில் (திமுக): நகர வீதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க சாலையோரத்தில் குவிந்துள்ள மணலை உடனடியாக அகற்ற வேண்டும்.
எஸ். மயில்வாகனன் (அதிமுக): பேருந்து நிலையம் எதிரில் காவலர் குடியிருப்புக்கு அருகேயுள்ள நகராட்சி சிமென்ட் சாலையில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த போக்குவரத்தை காவல்துறை திடீரென தடை செய்துள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் வந்து செல்வதற்காக ஒதுக்கப்பட்ட நகராட்சி இடத்தையும் காவல்துறை ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
அந்த இடத்தை உடனடியாக நகராட்சியிடம் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
பிரச்னை தீரும் வரை காவல் நிலையத்தில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுகாதாரப் பணிகள் செய்யக் கூடாது.
ஏ.ஆர். பரமேஸ்வரன் (திமுக): நகராட்சி மின் மயானம் திறக்கப்படாமல் உள்ளது.
தலைவர்: சோதனைப் பணிகள் முடிந்து, அடுத்த மாதத்தில் மின் மயானம் திறக்கப்படும்.
 நன்றி தினமணி 


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் நகர்மன்றக் கூட்டம்:திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு”