பேராவூரணியில் ஒரு ரூபாய்க்கு டீ விற்ற முதியவர்-திருக்குறளை தேசிய நூலாக்ககோரி

Posted January 17, 2015 by Adiraivanavil in Labels:
திருக்குறளை தேசிய நூலாக்ககோரி ஒரு ரூபாய்க்கு டீ விற்ற முதியவர்பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோவில் அருகே டீக்கடை நடத்தி வருபவர் மு.தங்கவேலனார்(68). இவர் பள்ளியில் படிக்காமல் அனுபவ அறிவின் மூலம் பலநூல்களை கற்றறிந்து பாவலராக விளங்குகிறார். குறிப்பாக திருக்குறளை பரப்புவதிலும் திருக்குறள் நெறிப்படி வாழ வேண்டும் என வலியுறுத்தி வாழ்ந்து வருகிறார்.
திருக்குறளை
மாணவர்களும் பொதுமக்களும் படித்து பொருளறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தினசரி காலை ஒருமணிநேரம் இலவசமாக திருக்குறள் வகுப்பு நடத்துகிறார். இவரது திருக்குறள் வகுப்பிற்கு பேராசிரியர்களிலிருந்து பள்ளி மாணவர்கள் வரை வருகின்றனர்.
இவர் தமது டீக்கடையில் திருவள்ளுவர் தினத்தன்று காலை முதல் இரவு வரை ஒரு டீ ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தார். இது குறித்து பாவலர் மு.தங்கவேலனாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
திருக்குறளுக்கு இணையான நூல் உலகத்தில் கிடையாது. திருக்குறள் சிந்தனையாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி போராடி வருகிறோம். இதில் இன மொழி, மத வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க போராட வேண்டும். தமிழக அரசு திருக்குறளுக்கு தனிவாரியம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் எத்தனையோ பேர்களுக்கு பிறந்த நாட்களை சிறப்பாக கொண்டாடுகிறோம். ஆனால் திருவள்ளுவரின் பிறந்த தினத்தை யாரும் கொண்டாடுவதில்லை. திருவள்ளுவர் தினம் என்பது அவரது பிறந்த நாள். அதை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக இன்று ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்தேன். இன்று காலையிலிருந்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இங்கு வந்து டீகுடித்து சென்றுள்ளனர்.
என்ன காரணத்திற்காக டீ ஒரு ரூபாய் என்று கேட்டவர்களிடம் திருவள்ளுவர் குறித்த கருத்தை தெரிவித்துள்ளேன். இதன் மூலம் சிலராவது குறள் நெறிப்படி வாழ்ந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க போராட முன்வர வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.
நன்றி மாலைமலர்



0 comment(s) to... “பேராவூரணியில் ஒரு ரூபாய்க்கு டீ விற்ற முதியவர்-திருக்குறளை தேசிய நூலாக்ககோரி”