முத்துப்பேட்டை அருகே வீட்டில் நாட்டுவெடி தயாரித்தவர் கைது

Posted January 24, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடை மேலக்காட்டை சேர்ந்தவர் மதியழகன் (வயது 55). இவர் கடந்த 2009–ம் ஆண்டு அதே பகுதியில் நாட்டுவெடி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் அவரது நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். இதையடுத்து அவரது வெடி தயாரிக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.
இதையடுத்து விடுதலையாகி வெளியில் வந்த அவர் சட்டவிரோதமாக அனுமதியின்றி தொடர்ந்து வெடிமருந்துகள் தயாரித்து வந்துள்ளார். அதனை கண்டுபிடித்த போலீசார் 2 முறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்த அவர் தனது வீட்டில் வைத்து அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்து விற்பனை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மதியழகனின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது மதியழகனின் வீட்டில் நாட்டு வெடி தயாரிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த 5 கிலோ வெடி மருந்து, 1½ அடி நீளம் உள்ள 2 பிளாஸ்டிக் குழாய்கள் புஷ்வானம் தயார் செய்வதற்கான 50 குடுவைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்தனர்.


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே வீட்டில் நாட்டுவெடி தயாரித்தவர் கைது”