முத்துப்பேட்டை பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா மழை நீரில் சாய்ந்தது-நிமிர்த்தி கட்டும் பணியில் விவசாயிகள் தீவிரம்

Posted December 22, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் சாய்ந்து விட்டது. அதை நிமிர்த்தி கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். முத்துப்பேட்டை பகுதியில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 75 நாள் கடந்த நிலையில் பயிர்கள் நல்ல வளர்ச்சியடைந்து இருந்தது. இன்னும்
15 தினங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது.
இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கன மழையால் எடையூர் சங்கேந்தி, பெத்த வேளாண் கோட்டகம், கீழ நம்மங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழை நீரில் சாய்ந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இழப்பை தவிர்க்க சாய்ந்த பயிர்களை நிமிர்த்தி கட்டும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து எடையூர் சங்கேந்தியை சேர்ந்த விவசாயி அசோகன் கூறுகையில், நான் 200 ஏக்கர் அளவில் ஐஸ்வர்யா ரக நெல் சாகுபடி செய்தேன். அந்த பயிர் சாகுபடிக்கு நான் செலவிட்ட தொகை, உழைப்பு மிக அதிகம். தற்போது பெய்த மழையால் பயிர் முழுவதும் சாய்ந்து வீணாகி விட்டது. இந்த இழப்பை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை என்றார்.
பெத்தவேளாண் கோட்டகம் விவசாயி பன்னீர் செல்வம் என்பவர், எங்கள் பகுதியில் பெரும்பாலான பயிர்கள் சாய்ந்து விட்டது. ஏற்கனவே பல ஆயிரம் செலவிட்ட எங்களுக்கு தற்பொழுது சாய்ந்த பயிர்களை நிமிர்த்தி கட்டி பாதுகாக்க ஆள் ஒன்றுக்கு குறைந்தது ரூ.150 வீதம் கூலியும், இதர செலவும் ஏற்பட்டு இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்றார்.
நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டை பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா மழை நீரில் சாய்ந்தது-நிமிர்த்தி கட்டும் பணியில் விவசாயிகள் தீவிரம்”