முத்துப்பேட்டையில் தொடரும் தேக்குமர கடத்தல்-

Posted December 23, 2014 by Adiraivanavil in Labels:

முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ந்து அரசுக்கு சொந்தமான தேக்கு மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான தேக்கு மரங்கள் உள்ளது. சமீப காலமாக இப் பகுதிகளில் மர்ம கும்பல் இந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். இவ்வாறு வெட்டப்படும் மரங்களை
அருகேயுள்ள குளங்களில் பதுக்கி வைத்து, பின்னர் அவற்றை எடுத்து விற்று வருகின்றனர்.சமீபத்தில் உதயமார்த்தாண்டபுரம் நாச்சிக்குளம் ஆற்றங்கரையில் இருந்த ஏராளமான தேக்கு மரங்கள் அடிக்கடி வெட்டி கடத்தப்பட்டு வந்தது. வனத்துறையினர் தீவிர முயற்சிக்குப்பின் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்து பல லட்சம் மதிப்பு தேக்கு மரங்களைப் பறிமுதல் செய்தனர். இருப்பினும் பல பகுதிகளில் தொடர்ந்து வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது.
மேலும் தனியார் வீடுகள் மற்றும் தோப்புகளில் வளர்க்கப்படும் தேக்கு மரங்களை வனம் மற்றும் வருவாய் துறை அனுமதியின்றி வெட்டி விற்பதும், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவதும் நடந்து வருகிறது. இவ்வாறு வெட்டப்பட்ட தேக்கு மரங்கள் மாட்டு வண்டிகள், டிராக்டர், வேன், லாரி போன்ற வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுவதாகவும், இதை வனத்துறையினர் கண்டு கொள்வது இல்லை என்று கடந்த நவம்பர் 6ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும் தற்போது பல பகுதிகளில் இரவு நேரங்களில் மரங்களை வெட்டி கடத்துவது நடந்து வருகிறது. உதாரணமாக ஆலங்காடு, கோரையாறு, ஆற்றங்கரை மற்றும் வீரன்வயல் செல்லும் வழியில் உள்ள தேக்கு மரங்களை மர்ம கும்பல் கடந்த சில தினங்களாக இரவில் வெட்டி கடத்தி வருகிறது.
தற்போது அவர்கள் வெட்டிய மரத்துண்டுகள் அப்பகுதியில் ஆங்காங்கே கிடக்கிறது. வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து இந்த அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


நன்றி தினகரன் 















0 comment(s) to... “முத்துப்பேட்டையில் தொடரும் தேக்குமர கடத்தல்-”