மொபைல் போன்களால் சீரழியும் பள்ளி மாணவர்கள் - பெற்றோர் உணர்வரா?
Posted December 14, 2014 by Adiraivanavil in Labels: தமிழகம்
இயந்திரத்தனமான உலகில், ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்துடனும், கண்டிப்புடனும் வளர்க்க தவறிவிடுகின்றனர்.
பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கி தந்தால், பிரச்னை முடிந்து விடும் என்று நினைக்கும் பெற்றோரால்தான் அதிகப்படியான அசம்பாவிதங்கள் அரங்கேறி வருகின்றது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, மாணவர்களுக்கு கல்லுாரி சென்ற பின்பே, இருசக்கர வாகனம் என்ற கனவு நினைவாகும்.
ஆனால், தற்போது பள்ளி பருவத்தை முடிக்கும் முன்பே இருசக்கர வாகனம், மொபைல் போன் மாணவர்களின் மிகப்பெரும் கனவாகிவிட்டது. இதன், ஆபத்தை ஆராயாத பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் கைகளில் மொபைல் போன் வாங்கிக்கொடுத்து அனுப்பி விடுகின்றனர். அதிலும், நவீன தொழில்நுட்படங்களை கொண்ட போன்களே மாணவர்களின் சாய்ஸ்.
பள்ளிக்கல்வி துறை, வகுப்பில் மாணவர்கள் மொபைல் போன் கொண்டு வரக்கூடாது; அப்படி வந்தால், ஆசிரியர்கள் அதை வாங்கி வைத்துக் கொண்டு, பள்ளி முடிந்து, வீட்டுக்கு அனுப்பும்போது எச்சரித்து திருப்பி கொடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இதுபோன்ற செயல்பாடுகள், அனைத்து பள்ளிகளிலும் தினமும் அரங்கேறி வருகின்றன. ஒரு மாணவன் மொபைல் போன் வைத்திருப்பது, அவனை மட்டுமில்லாது சுற்றி இருக்கும் அனைத்து மாணவர்களையும் கெடுத்துவிடுகிறது.
ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கும் நிலை மாறி, மாணவர்களை பார்த்து அஞ்சும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளதால், இதுபோன்ற பாதை மாறும் மாணவர்களை கண்டிக்க இயலாமல், சூழ்நிலை கைதிகளாய் தவிக்கின்றனர். இன்றைய சமூகத்தில், மொபைல் போன் கைகளில் இல்லாத மாணவர்களை காண்பது என்பது அரிதாகிவிட்டது.
தொழில்நுட்ப மாற்றங்களை கண் எதிரே கொண்டு வரும் கையடக்க கருவியான மொபைல் போனை கொண்டு, குறுந்தகவல் மூலம் மணிக்கணக்கில் தேவையற்ற விஷயங்களை எளிதாக பரிமாறிக்கொள்வது, ஆபாச படங்களை பார்ப்பது, வீடியோ கேம்ஸ், இதன்மூலம் இணையதளங்களில்நேரம் செலவிடுவது போன்றவற்றால் கவனம் சிதறி எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது.
மனோசாந்தி அமைப்பின் உளவியல் நிபுணர் மகேஷ் கூறியதாவது: தொலைபேசி என்பது மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும், தொல்லை பேசி என்பதில் சந்தேகம் இல்லை. இதை பயன்படுத்துவதால், கவனச்சிதைவு ஏற்படுகிறது. பாலியல் பிரச்னை, வன்முறையில் ஈடுபடும் மாணவர்களில், 90 சதவீதத்தினர் மொபைல்போன் பயன்படுத்தி உள்ளதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் போன், வாங்கிதரும் பெற்றோர், அவர்களின் எதிர்காலத்தை அழிக்க அஸ்திவாரம் போட்டுவிட்டார்கள் என்றே அர்த்தம். அன்புடன் கூடிய கண்டிப்பு மற்றும் கண்காணிப்பு, அரவணைப்பு, சுமுகமான குடும்ப சூழல் இவை அனைத்தும் இருக்கும் பட்சத்தில், மாணவர்கள் நல்ல மனிதர்களாக இருப்பர் என்பதை பெற்றோர் உணர வேண்டும். இவ்வாறு, உளவியல் நிபுணர் மகேஷ் தெரிவித்தார்.
தேவை எதுவோ அதுவே போதும்
கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாரதி கூறுகையில், "ஆசிரியர்களான, எங்களால் மாணவர்களை இன்றைய சூழலில் கண்டித்து கூட பேச கூட இயலவில்லை. பெரும்பாலான மாணவர்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். பெற்றோரை அழைத்து கண்டித்தும், பெரிதாக மாற்றம் இல்லை. பெற்றோர் சற்று பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம். எந்த வயதில், என்ன தேவையோ அதை மட்டுமே வாங்கி தர வேண்டும்" என்றார்.
நன்றி செய்திகள்.vkalathur.in/
0 comment(s) to... “மொபைல் போன்களால் சீரழியும் பள்ளி மாணவர்கள் - பெற்றோர் உணர்வரா?”