பட்டுக்கோட்டையில் கழுத்தை நெரித்து பெண் கொலை கணவர் கைது; கள்ளக்காதலிக்கு வலைவீச்சு

Posted September 15, 2015 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டையில் கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக கணவரின் கள்ளக்காதலியை போலீசார் தேடிவருகின்றனர்.

கழுத்தை நெரித்து கொலை

பட்டுக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் கபீர்கான் (வயது 35). இவர், பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பரிமளா(30). இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அப்துல்லா (7) என்ற மகனும், ஆயிஷா (5) என்ற மகளும் உள்ளனர். கபீர்கான் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் வெளியில் சென்று விட்டு கபீர்கான் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. கபீர்கான் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது வீட்டில் பரிமளா பிணமாக கிடந்தார். அவருடைய கழுத்தில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிச்சை, இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், சப்–இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பரிமளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிமளாவின் கணவர் கபீர்கானை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கபீர்கான், பரிமளாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கபீர்கானை கைது செய்து பரிமளாவை ஏதற்காக கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கபீர்கானின் கள்ளக்காதலியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் கழுத்தை நெரித்து பெண் கொலை கணவர் கைது; கள்ளக்காதலிக்கு வலைவீச்சு”