தஞ்சை மாவட்டத்தில் 18½ லட்சம் வாக்காளர்கள் புதிதாக 34,988 பேர் சேர்ப்பு
Posted September 16, 2015 by Adiraivanavil in Labels: தஞ்சை கலெக்டர்
பட்டியல் வெளியீடு
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில்நடைபெற்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் தஞ்சை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சுப்பையன் நேற்று வெளியிட்டார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, வல்லம் பேரூராட்சி தலைவர் சிங்.ஜெகதீசன், தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கட்சி சார்பில் ராம்பிரசாத், பழனியப்பன், தே.மு.தி.க. சார்பில் நகர செயலாளர் அடைக்கலம், துணை செயலாளர் லக்கிசெந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் திருஞானம், பாரதீய ஜனதா கட்சி சார்பில் நகர தலைவர் விநாயகம், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அரங்கராஜன், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கரிகாலசோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
18½ லட்சம் வாக்காளர்கள்
பின்னர் கலெக்டர் சுப்பையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தால் 1-1-2015 அன்று தகுதி நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியல்களை தயார் செய்து 15-9-2015 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 17 ஆயிரத்து 605. இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 2 ஆயிரத்து 826 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 14 ஆயிரத்து 764 பேரும் ஆவர். இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 15 ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னர் மொத்த வாக்காளர்கள் 18 லட்சத்து 50 ஆயிரத்து 566 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 17 ஆயிரத்து 22 ஆகும். பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 33 ஆயிரத்து 529 ஆகும். 34 ஆயிரத்து 988 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 15 ஆயிரத்து 161 பேரும், பெண் வாக்காளர்கள் 19 ஆயிரத்து 827 பேரும் ஆவர்.
2,175 வாக்குச்சாவடிகள்
வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புக்கு பிறகு தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 2175 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக 2,175 பேர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட அலுவலர்களாக 1,113 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் படிவம்-6ல் விண்ணப்பம் செய்து புதிய வாக்காளர்களாக சேர்ந்து கொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் தவறு இருந்தால் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வருகிற 14-10-2015 வரையிலான கால அவகாசத்தில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 20-ந்தேதியும், அடுத்த மாதம் 4-ந்தேதியும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comment(s) to... “தஞ்சை மாவட்டத்தில் 18½ லட்சம் வாக்காளர்கள் புதிதாக 34,988 பேர் சேர்ப்பு”