தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்

Posted September 13, 2015 by Adiraivanavil in Labels:
பேராவூரணி செப்டம்பர்-13;
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் , தென்னக நதிகளை இணைத்திடவும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைத்திடவும், தாது மணல் கொள்ளையை தடுத்திடவும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை முற்றாக கைவிடவும், 60 வயதை கடந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கிடவும், நெல், கரும்பு, பருத்தி, கொப்பரை ஆகியவற்றிற்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ( இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) சார்பில் வரும் செப்டம்பர் 17-ந்தேதி தஞ்சாவூரில் "விவசாயிகள் கோரிக்கை விளக்க மாநாடு" தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் பா.பாலசுந்தரம் தலைமையில் 
நடைபெறுகிறது.
     மாநாட்டில் அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் அதுல்குமார் அஞ்சான், இரா.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், ஆர்.விஸ்வநாதன், இரா.முத்தரசன், எஸ்.குணசேகரன், டாக்டர் வேறு.துரைமாணிக்கம், இரா.திருஞானம், டி.கீதநாதன் உள்ளிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், விவசாய சங்கத்தலைவர்கள் 
பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.
    இம்மாநாட்டினை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது
         மேற்பனைக்காட்டில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேராவூரணி ஒன்றியச்செயலாளர் பி.கருணாமூர்த்தி தலைமை வகித்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி பி.காசிநாதன், சேதுபாவாசத்திரம் எம்.சின்னத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
      விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் கே.சோமசுந்தரம், ஒன்றிய துணைச்செயலாளர் டி.ரவி, மூத்த தோழர் வை.கருப்பையன், விவசாய தொழிலாளர் சங்க பொருளாளர் பழனியப்பன், அப்துல் சுக்கூர், இளைஞர் பெருமன்ற நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
          திருச்சிற்றம்பலம், வாட்டாத்தி கொல்லைக்காடு, இடையாத்தி, ஆவணம், மேற்பனைக்காடு, ரெட்டைவயல், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், ரெண்டாம்புளிக்காடு, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் விவசாய சங்க, விவசாய தொழிலாளர் சங்க, கட்சி கிளை உள்ளிட்ட பல்வேறு அரங்கங்களை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.


படம் பேராவூரணி ஒன்றியம் மேற்பனைக்காட்டில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் பேராவூரணி சிபிஐ ஒன்றியச்செயலாளர் பி.காசிநாதன் உரையாற்றுகிறார்.



0 comment(s) to... “தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்”