விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை போலீஸ் அதிகாரி தகவல்

Posted September 12, 2015 by Adiraivanavil in Labels:
தஞ்சையில் 19-ந்தேதி நடைபெறும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.


ஆலோசனை கூட்டம்



தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்திவிழா பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க., இந்து முன்னணி, தி.மு.க. உள்பட 39 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-



வருகிற 17-ந்தேதி தஞ்சை நகரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை 19-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். கடந்த ஆண்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்ற பாதையிலேயே தான் இந்த ஆண்டும் அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்து சென்று வடவாற்றில் கரைக்க வேண்டும்.



கடந்த ஆண்டு எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை தவிர புதிதாக சிலைகள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தனியார் இடத்தில் சிலை வைத்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி கடிதம் பெற்று தர வேண்டும். சிலையின் உயரம் 6 அடிக்குள் இருக்க வேண்டும். களிமண்ணால் செய்த சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.



பட்டாசு தடை 



இதர மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் வழியே விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும்போது தனிநபர் விமர்சனம், மத முழக்கங்கள் இடுவது, மற்ற மதத்தினரின் மனதை புண்படுத்தக்கூடிய வகையில் விமர்சனம் செய்வது மற்றும் பிற மதத்தினரின் வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் மேளதாளங்கள் வாசித்தல் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 



தஞ்சை நகரில் பிரதிஷ்டை செய்யப்படும் அனைத்து சிலைகளும் தஞ்சை ரெயிலடிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து காந்திசாலை, பழைய பஸ் நிலையம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கொடிமரத்துமூலை வழியாக கரந்தை வடவாற்றிற்கு கொண்டு செல்ல வேண்டும். யானையை அழைத்து செல்லக்கூடாது. விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களில் மண்எண்ணெய் விளக்கு பயன்படுத்தக்கூடாது. 



மணல் மற்றும் தண்ணீர் போன்ற தீயணைப்பு பொருட்கள் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மது அருந்தக்கூடாது. சிலைகளின் உயரம் மற்றும் பிரதிஷ்டை செய்யப்படும் இடம் குறித்து போலீஸ்துறையினரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.



இவ்வாறு அவர் கூறினார். 


0 comment(s) to... “விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை போலீஸ் அதிகாரி தகவல்”