மத்திய பிரதேசத்தில் பயங்கர விபத்து கியாஸ் சிலிண்டர்கள் தீப்பிடித்து கட்டிடங்கள் இடிந்தன வெடிவிபத்தில் 90 பேர் பலி 150 பேர் படுகாயம்
Posted September 13, 2015 by Adiraivanavil in Labels: வெளிமாநில செய்திகள்
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வெடிவிபத்தில் 90 பேர் பலியானார்கள். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று காலை நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஜெலட்டின் குச்சிகள்
மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்துக்கு உட்பட்ட பெட்லவாட் நகர் பஸ் நிலையத்துக்கு அருகே ராஜேந்திர கசாவா என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் உள்ளது. இவர் பாறைகள் நிறைந்த பகுதியில் கிணறு தோண்டுவதற்காக, வெடிபொருட்கள் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்றிருந்தார்.
இதற்காக அந்த கட்டிடத்தில் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் போன்ற ஏராளமான வெடிபொருட் களை வைத்திருந்தார். இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் 2 கடைகள் உள்ளன. மேலும் இந்த கட்டிடத்தையொட்டி ஓட்டல் ஒன்றும், ஏராளமான வீடுகளும் உள்ளன.
திடீரென வெடித்தன
பஸ் நிலைய பகுதி என்பதாலும், நகரில் உள்ள முக்கியமான உணவகம் என்பதாலும், அந்த ஓட்டலில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பியிருக்கும். மேலும் குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்கு செல்லும் ஏராளமான தொழிலாளர்களும் அந்த பகுதிக்கு வந்து செல்வர்.
நேற்று காலையில் இந்த ஓட்டலில் டீ குடிப்பதற்காகவும், காலை உணவுக்காகவும் தொழிலாளர்கள், அலுவலகம் செல்வோர், பள்ளி மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் குழுமியிருந்தனர். அப்போது சுமார் 8.30 மணியளவில் அந்த 3 மாடி கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துசிதறின.
கியாஸ் சிலிண்டர்களும் வெடித்தன
இதனால் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த ஓட்டல் மற்றும் வீடுகளுக்கும் பரவியது. இதில் ஓட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் அதிர்ந்தது.
ஓட்டலில் இருந்தவர்கள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களும் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் அந்த ஓட்டலும், 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமாயின. மேலும் அந்த 3 மாடி கட்டிடமும் பெரும் சேதமடைந்தது.
போர்க்களம் போல் ஆனது
இந்த கோர சம்பவத்தில் ஓட்டலில் இருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் வசித்தோர் என ஏராளமானோர் தீயில் சிக்கி கூச்சலிட்டனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கதறினர். அந்த பகுதியில் நின்றிருந்தவர்கள் பலரும் உயிர் பிழைக்க ஓடினர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த சம்பவத்தின் போது உடல் சிதறியும், தீயில் கருகியும், இடிபாடுகளில் சிக்கியும் 90 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பேரிடர் மீட்புக்குழு
வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டது. அதன்படி தீயணைப்பு படையினர், போலீசார் என ஏராளமான அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து பேரிடர் மீட்புக்குழுவினரும், சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களும் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
மருத்துவமனைகளில் அனுமதி
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு பெட்லவாட், ஜபுவா மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களான ரட்லம், இந்தூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். சிலர் குஜராத் மாநிலத்தின் தகோட் மாவட்ட மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விசாரணைக்கு உத்தரவு
மாநில பழங்குடியினர் நலத்துறை மந்திரி அந்தர் சிங் ஆர்யா, மாவட்ட கலெக்டர் அருணா குப்தா மற்றும் உயர் அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில உள்துறைமந்திரி பாபுலால் கவுர் உத்தரவிட்டார்.
வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்து கடும் அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் அறிவித்தார்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடியும் அதிர்ச்சி வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில், ‘ஜபுவா வெடிவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பது குறித்து அறிந்து கடும் வேதனையுற்றேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
ஜபுவாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
0 comment(s) to... “மத்திய பிரதேசத்தில் பயங்கர விபத்து கியாஸ் சிலிண்டர்கள் தீப்பிடித்து கட்டிடங்கள் இடிந்தன வெடிவிபத்தில் 90 பேர் பலி 150 பேர் படுகாயம்”