பேராவூரணி தொகுதியில் விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் விழா

Posted September 15, 2015 by Adiraivanavil in Labels:
 பேராவூரணி தொகுதியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் விலையில்லா கறவைப்பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் விழா வலப்பிரமன்காடு, சொர்ணக்காடு, ஊமத்தநாடு, வாத்தலைக்காடு ஆகிய நான்கு ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் என்.சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.
       விழாவில் தமிழக அரசின் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பங்கேற்று விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் ஆடுகளை வழங்கிப் பேசும்போது கூறியதாவது,
" கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு இத்திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது.
      இத்திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2011-12 ஆம் ஆண்டு முதல் 2014-15 ஆம் ஆண்டு வரை, ஆண்டிற்கு 600 கறவை பசுக்கள் வீதம் நான்காண்டுகளில் 2400 பெண் பயனாளிகளுக்கு தலா ஒரு கறவைப்பசு வீதம் 2400 பசுக்கள் ரூபாய் 83.44 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது.
            இதன் மூலம் ஒரு நாளைக்கு 14,400 லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த நான்காண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 2400 குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்துள்ளன. கடந்த நான்காண்டுகளில் வழங்கப்பட்ட விலையில்லா கறவைப் பசுக்கள் இதுவரை ரூபாய் 20 இலட்சம் மதிப்புள்ள 1600 கன்றுகளை ஈன்றுள்ளது
          2015-16 ஆம் நிதியாண்டில் 600 பெண் பயனாளிகளுக்கு 600 விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் மூலம் கடந்த ஆகஸ்ட் 2015 வரை 235 பயனாளிகளுக்கு ரூபாய் 80இலட்சம் மதிப்புள்ள 235 கறவைப்பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
      பேராவூரணி ஒன்றியத்தை சேர்ந்த வலப்பிரமன்காடு ஊராட்சியில் 35 பயனாளிகளுக்கு, ரூபாய் 11.97 இலட்சம் மதிப்புள்ள விலையில்லா கறவைப்பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
      வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் கடந்த நான்காண்டுகளில் 23,441 பெண் பயனாளிகளுக்கு, ஒரு பயனாளிக்கு தலா 4 ஆடுகள் வீதம் 93,764 ஆடுகள் ரூபாய் 298.8 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 374 குட்டிகளை ஈன்றுள்ளது. நான்காண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 23,441 குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்துள்ளது. இதன்மூலம் ஈன்ற குட்டிகளின் மதிப்பு ரூபாய் 11.57 கோடியாகும். இம் மாவட்டத்தில் 131 ஊராட்சிகளில் 6706 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம், 26,824 விலையில்லா வெள்ளாடுகள் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் வரை 2106 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 8424 விலையில்லா வெள்ளாடுகள், ரூபாய் 26.8 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது. பேராவூரணி ஒன்றியத்தை சேர்ந்த சொர்ணக்காடு ஊராட்சியில் 44 பயனாளிகளுக்கும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த ஊமத்தநாடு ஊராட்சியில் 105 பயனாளிகளுக்கும், வாத்தலைக்காடு ஊராட்சியில் 32 பயனாளிகளுக்கும் ஆக கூடுதல் 149 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 724 வெள்ளாடுகள் ரூபாய் 23.33 இலட்சத்தில் வழங்கப்பட்டுள்ளது" இவ்வாறு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேசினார்.
     விழாவில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள்  வழக்கறிஞர் குழ.செ.அருள்நம்பி, பழனியம்மாள் சாமியப்பன், பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி அசோக்குமார், பேராவூரணி  தொகுதிக்கழக செயலாளர் மா.கோவிந்தராஜன், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் முதுகாடு இளங்கோ, மணக்காடு ஒன்றியக்குழு உறுப்பினர் வி. செல்வராஜ், பேராவூரணி நகர கழகசெயலாளர் வி.என்.பக்கிரிசாமி, சூர்யா கவியரசன், பின்னவாசல் ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தர், சொர்ணக்காடு செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஊராட்சி தலைவர்கள் வலப்பிரமன்காடு வி.எஸ்.இளங்கோ, வாத்தலைக்காடு கே.காமராஜ், ஊமத்தநாடு மல்லிகா ஜபார், சொர்ணக்காடு சண்முகநாதன் ஆகியோர் விழா தொடக்கத்தில் வரவேற்றுப் பேசினர்.

 படம் வலப்பிரமன்காடு ஊராட்சியில் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டது. அருகில் மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் மற்றும் பலர் உள்ளனர்.




0 comment(s) to... “பேராவூரணி தொகுதியில் விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் விழா”