வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.15 லட்சம் பரிசு வருமான வரித்துறை
Posted September 07, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
அந்த வகையில் வருமான வரித் துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இவற்றை நாடு முழுவதும் உள்ள அனைத்து வருமான வரி அலுவலகங்களுக்கும் கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசுக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ் மற்றும் தனி நபர் வருமான வரி ஆகியவற்றை செலுத்தாமல் இருப்பவர்கள் மற்றும் முறையாக கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் பற்றி நம்பகமான தகவல் தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
குறிப்பிட்ட நபர் தரும் தகவல் மூலம் வசூலாகும் வரித் தொகையில் 10 சதவீதம் தகவல் தந்த நபருக்கு பரிசாக வழங்கப்படும். அதேநேரம் இந்த பரிசுத் தொகைக்கான உச்சவரம்பு ரூ.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்து தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். அவர்கள் தரும் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் சட்ட ரீதியாக தேவை ஏற்பட்டால் இதற்கு விதிவிலக்கு உண்டு. மேலும் போதுமான ஆதாரமின்றி, ஊகத்தின் பேரில் தரப்படும் தகவல்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
இந்த புதிய விதிமுறைகள் கடந்த நிதியாண்டுக்கும் நடப்பு நிதியாண்டுக்கும் பொருந்தும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவில் வரி பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர், முகவரி மற்றும் பாக்கி வைத்துள்ள வரித் தொகை ஆகியவற்றை நாளிதழ்களில் வெளியிடும் நடைமுறையை இந்த ஆண்டு தொடக்கம் முதலே வருமான வரித்துறை கடைபிடித்து வருகிறது. இதுகுறித்து வருமான வரித் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதுவரையில் ரூ.2 ஆயிரம் கோடி வரி பாக்கி வைத்துள்ள சுமார் 50 பேரின் விவரங்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோல டிடிஎஸ் மற்றும் வருமான வரி பாக்கி வைத்துள்ள தனி நபர் உட்பட வரி பாக்கி வைத்துள்ள மேலும் பலரைப் பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.
0 comment(s) to... “வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.15 லட்சம் பரிசு வருமான வரித்துறை”