மனநிலை பாதித்த பெண்ணின் குழந்தையை நாய்கள் கடித்து தின்ற கொடூரம்

Posted October 07, 2014 by Adiraivanavil in Labels:
திருச்சிற்றம்பலம், அக்.7-
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 45). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மலையூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை (30) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு
முன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு சிவா (6), குமரேசன் (2) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சுந்தரராஜ் தென்னங்கீற்று மட்டை வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், சுந்தரராஜ் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வருவதாகவும் அந்தப் பெண்ணும் சுந்தரராஜூம் அஞ்சலையை பல்வேறு வகைகளில் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் அவரது உறவினர்களும் சுந்தரராஜை அழைத்து பலமுறை கண்டித்துள்ளனர். ஆனால் அவரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை.
இந்நிலையில், 3 வது முறையாக கர்ப்பம் அடைந்த அஞ்சலை, மனநிலை பாதிக்கப்பட்டார். வீட்டை விட்டு புறப்பட்ட அவர் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் பல இடங்களில் சுற்றித் திரிந்தார். திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில் உள்ள அரச மரத்தடியில் கடந்த 6 மாதங்களாக அவர் தங்கி இருந்தார்.
மனநிலை பாதிக்கப்பட்டு, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலையை இரவு நேரத்தில் பல சமூக விரோதிகளும் சீண்டிப் பார்ப்பதற்கு தவறவில்லை, இந்நிலையில், சம்பவத்தன்று, திருச்சிற்றம்பலம் செட்டிகுளம் என்ற வெட்ட வெளி குளத்தில் அஞ்சலைக்கு குழந்தை பிறந்துள்ளது. பக்கத்தில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் அந்த குழந்தையை கவ்விச் சென்று கடித்து குதறி தின்றது. அக்கம் பக்கத்தில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் இந்த சம்பவத்தை பார்த்து பதைத்தனர். ஆனால் அவர்களால் உதவி ஏதும் செய்ய முடியவில்லை
கை பிடித்த கணவனின் தவறான நடவடிக்கையால், மனநிலை பாதிக்கப்பட்டு, ஒரு குழந்தையின் கொடூரமான மரணத்தை நேரில் பார்த்தும் சிறிதும் சபலப்படாத அஞ்சலையை அரசு காப்பகத்தில் வைத்து, பராமரிக்க தஞ்சை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.நன்றி மாலைமலர் 


0 comment(s) to... “மனநிலை பாதித்த பெண்ணின் குழந்தையை நாய்கள் கடித்து தின்ற கொடூரம்”