டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்
Posted October 23, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், சுகாதாரத் துறையின் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
டெங்கு காய்ச்சல், "ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த வகை கொசுக்கள், பெரும்பாலும் பகல் நேரத்தில் மனிதர்களை கடிக்கும் இயல்புடையது. இவை வீடுகளை சுற்றி குவிக்கப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உடைந்த பாட்டில்கள், முட்டை ஓடுகள், டயர்கள், மண் பாண்டங்கள் போன்றவற்றில் தேங்கும் அசுத்தமான மழை தண்ணீரில் உற்பத்தியாகிறது. இவற்றை கட்டுப்படுத்த வீடுகளை
சுற்றி தேவையற்ற பொருட்கள் குவிப்பதை தவிர்க்க வேண்டும். நீர்தேக்க தொட்டிகள், சின்டேக்ஸ் டேங்குகள் ஆகியவற்றை கொசுக்கள் உள்ளே புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.
காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, உடல்வலி, கண்வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் அறிகுறி. இவை தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, டாக்டர்கள் ஆலோசனைபடி, சிகிச்சை பெறவேண்டும். டெங்கு காய்ச்சலை "எலிசா' பரிசோதனையின் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். இவ்வகை பரிசோதனை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மேம்பாலம் அருகில் உள்ள மண்டல பூச்சியியல் குழுமம் ஆகியவற்றில் மட்டுமே உள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்தின் மூலமாகவும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தலாம். நிலவேம்பு மற்றும் மலைவேம்பு கஷாயம், பப்பாளி இலை சாறு ஆகியவை டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் ஆற்றல் படைத்தது. இவை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவு மூலம் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தை, 97911 46511, 78128 77080 ஆகிய போன் எண்களிலும், மாவட்ட மலேரியா அலுவலரை, 98940 20369 மொபைல் எண்ணிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நன்றி தினமலர்
0 comment(s) to... “டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்”