இந்திய டூரை இன்றோடு முடித்து நாடு திரும்புகிறது மே.இ.தீவுகள் அணி-பிசிசிஐ அதிர்ச்சி
Posted October 17, 2014 by Adiraivanavil in Labels: விளையாட்டு
வீரர்கள் சம்பள விவகாரம் வெடித்ததால், மேற்கிந்திய தீவுகள் அணி இன்றோடு இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டது. மேற்கிந்திய வீரர்கள் சங்கம், மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட வீரர்கள் சம்பள ஒப்பந்தம் மீதான சர்ச்சைகளுக்கு தீர்வு ஏற்படாததால் தொடர்ந்து இந்தத் தொடரில் விளையாட முடியாது என்று மேற்கிந்திய வீரர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்தத் தகவலை
மேற்கிந்திய அணி நிர்வாகி ரிச்சி ரிச்சர்ட்சன் இ-மெயில் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இன்று தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல், நவம்பர் மாதத்தில் இலங்கையுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய அணி.
வீரர்களை ஆலோசிக்காமல் மே.இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்கள் சம்பளத்தை கணிசமாக குறைத்துவிட்டது. மேலும் வீரர்களின் தனிப்பட்ட ஸ்பான்சர்கள் விவகாரத்திலும் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு எதிரான முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போதைய இந்திய தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்ப முடிவெடுத்துள்ளது மேற்கிந்திய அணி. இது குறித்து பிசிசிஐ அதிர்ச்சி தெரிவித்துள்ளது. மேலும், இது போன்று தொடரைப் பாதியிலேயே நிறுத்துவதால் ஏற்படும் நஷ்டம் மற்றும் பல விவகாரங்கள் குறித்து ஐசிசி-யிடம் முறையீடு செய்யவுள்ளது பிசிசிஐ.
0 comment(s) to... “இந்திய டூரை இன்றோடு முடித்து நாடு திரும்புகிறது மே.இ.தீவுகள் அணி-பிசிசிஐ அதிர்ச்சி”