பட்டுக்கோட்டையில் மர அறுவை மில்லில் தீ விபத்து

Posted October 03, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை, அக்.3–
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டை தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் வண்டிப்பேட்டையில் மர அறுவை மில் நடத்தி வருகிறார். இன்று அதிகாலை இந்த மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவியது. இதனை பார்த்த
பொது மக்கள் மில் உரிமையாளர் பெரியசாமிக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் உடனடியாக அங்கு விரைந்து வந்தார். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதியில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்தது.
பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குடி தண்ணீர் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து தீயணைப்பு துறையினருக்கு உதவினர்.
தீயணைப்பு வீரர்களுக்கு பொது மக்களும் உதவி செய்தனர். இதனால் தீ பக்கத்து கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதம் அடைந்தது.
மர அறுவை மில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெரியசாமிக்கு சொந்தமான 2 சக்கர வாகனமும் எரிந்து சேதம் அடைந்தது.
இந்த தீ விபத்து திட்டமிட்ட சதி என்றும் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் மூலம் சிலர் தீ வைத்து இருக்கலாம் என்று பாதிக்கப்பட்ட பெரிய சாமி கூறினார்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். நன்றி மாலைமலர்


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் மர அறுவை மில்லில் தீ விபத்து”