பட்டுக்கோட்டை அருகே ஊசி போட்டதில் ஒருவர் உடல்நலம் பாதிப்பு
Posted October 24, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை அருகே மருந்துகடையில் ஊசி போட்டதில் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த கடையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
மருந்துகடையில் ஆய்வு
தஞ்சை மண்டல மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குனர் கோவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா கரிசவயல் பகுதியில் உள்ள ஒரு மருந்துகடையில் அப்துல்அஜீஸ் என்பவருக்கு ஊசி போடப்பட்டதில் அவர் உடல்நலம்
பாதிக்கப்பட்டதாக புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை சரக மருந்துகள் ஆய்வாளர் விமல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருந்துகடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விதிமீறல்
ஆய்வின்போது அங்கு விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கிருந்து மருந்துகள் மாதிரி எடுக்கப்பட்டு அரசு பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாக்டரின் ஆலோசனை இன்றி யாரும் மருந்துகள் உட்கொள்ளக்கூடாது. காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
மருந்து உபயோகிப்பாளர்கள் மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்துகடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். வாங்கிய மருந்துகளுக்கு விற்பனை ரசீது கேட்டு பெற வேண்டும். மருந்தின் காலாவதி தேதியை கவனித்து வாங்க வேண்டும். மருந்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை சரிபார்த்து வாங்க வேண்டும். மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சமில்லாத உலர்ந்த இடத்தில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் வைக்க வேண்டும்.
ஆபத்தை ஏற்படுத்தும்
உங்களுக்கு நீங்களே சுயமருத்துவம் செய்து கொள்ளக்கூடாது. டைக்ளோபினாக் சோடியம், பொட்டாசியம், ஐபுப்ரோபென் மற்றும் ஆஸ்ப்ரின் ஆகிய மருந்துகளை டாக்டரின் ஆலோசனை இன்றி உட்கொள்வது ஆபத்தை விளைவிக்கக்கூடும். நீங்கள் தொடர்ந்து உபயோகிக்கும் மருந்துகளை (குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகள்) டாக்டரின் ஆலோசனை இன்றி திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். மருந்துகளை சமையலறை மற்றும் குளியலறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள். மருந்துகளை உட்கொள்ளும் போது மதுபானங்களை தவிர்க்க வேண்டும். மற்றவரின் நோயின் தன்மை போன்று உங்களது நோய் இருந்தாலும் நீங்கள் உபயோகப்படுத்தும் மருந்துகளை மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.நன்றி தினத் தந்தி
0 comment(s) to... “ பட்டுக்கோட்டை அருகே ஊசி போட்டதில் ஒருவர் உடல்நலம் பாதிப்பு ”