முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தை மூதாட்டிகள் முற்றுகை

Posted October 30, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை, அக். 30:
நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் தர வலியுறுத்தி முத்துப்பேட்டை ஒன்றிய குழு அலுவலகத்தை மூதாட்டிகள் முற்றுகையிட்டனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.கே. நகரில் அரசின் மாதாந்திர உதவி தொகை ரூ.1,000 பெறுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் பலருக்கு கடந்த 3 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 25க்கும் மேற்பட்டவர்கள் 29 வருடங்களுக்கு மேலாக ரூ. 50 வழங்கிய காலத்திலிருந்து உதவி தொகை பெற்று
வருகிறார்கள். மீண்டும் உதவித்தொகை கேட்டு இவர்கள் அனைவரும் பலமுறை சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை.
இதனால் விரக்தி அடைந்த நாகம்மாள், காசியம்மாள், ஜானகி உட்பட 25க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் நேற்றுமுன்தினம் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒன்றியக்குழு தலைவர் நடராஜனை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். மூதாட்டிகளிடம் விசாரணை நடத்திய தலைவர் நடராஜன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் தாசில்தார் வேண்டுகோள்படி அனைவரையும் தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர் நடராஜன் கூறுகையில், வந்திருந்த அனைவருக்கும் தொடர்ந்து உதவி தொகை கிடைக்க தாசில்தாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு கண்டிப்பாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தை மூதாட்டிகள் முற்றுகை”