ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்து 6 பேர் பலி

Posted August 31, 2015 by Adiraivanavil in Labels:

okenakkal 1 திருமண நாளை கொண்டாட ஒகேனக்கல் சென்ற சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர், காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து பரிதாபமாக உயிர் இழந்தனர். 

திருமண நாளை கொண்டாட...

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கர்நாடகம், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து அருவியிலும், காவிரி கரையோரத்திலும் குளித்து பரிசலில் சென்று மகிழ்வார் கள்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). இவருடைய மனைவி கவுரி (55), இவர்களது மகன் ரஞ்சித் (35), இவருடைய மனைவி கோகிலா (30), இவர்களது மகள் சுதிஷா (10 மாதம்).

கிருஷ்ணமூர்த்தியின் மகள் கோமதி (29), இவருடைய கணவர் ராஜேஷ் (30), செல்போன் கடை உரிமையாளர். இவர்களது மகன்கள் சச்சின் (6லு), தர்சன் (2லு). நேற்று கோமதியின் திருமண நாள் ஆகும். இதைக் கொண்டாட அவர்கள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

பரிசலில் பயணம்

அதன்படி, கிருஷ்ணமூர்த்தி உள்பட 9 பேரும் சென்னையில் இருந்து ரெயில் மூலம் தர்மபுரி வந்து, அங்கிருந்து பஸ்சில் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், ஒகேனக்கல்லில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர். இதையடுத்து பரிசலில் சென்று காவிரி ஆற்றை ரசிக்க முடிவு செய்தனர்.

இதற்காக ஒகேனக்கல்லில் உள்ள மாமரத்துக்கடவு பரிசல் துறைக்கு சென்று ஒரு பரிசலில் ஏறினர். அந்த பரிசலை கஜாமுருகேசன் (50) என்பவர் ஓட்டிச்சென்றார். காவிரி ஆற்றில் பாறைகளுக்கு இடையே சென்ற அந்த பரிசல் பெரிய பாணி பகுதியில் உள்ள தொம்பச்சிக்கல் என்ற இடத்தில் சென்றுகொண்டு இருந்தது.

10 பேரும் மூழ்கினர்

அப்போது நீர்ச்சுழலில் சிக்கிய பரிசலில் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த பரிசல் ஓட்டி கஜாமுருகேசன் தண்ணீரை அள்ளி ஊற்றியபடி சென்றார். ஒரு கட்டத்தில் தண்ணீர் அதிகமாக வரவே பரிசல் திடீரென ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் பரிசலில் சென்ற 10 பேரும் காவிரி ஆற்றில் விழுந்து மூழ்கினர்.

இதை பார்த்ததும் அருகே பரிசல்களில் வந்து கொண்டிருந்த பரிசல் ஓட்டிகளான ஆனந்தன், சிவலிங்கம் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ஆற்றுக்குள் குதித்து ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். 

இதில் ராஜேஷ், அவருடைய மனைவி கோமதி, இவர்களது மகன் சச்சின், பரிசல் ஓட்டி கஜாமுருகேசன் ஆகிய 4 பேரும் மீட்கப்பட்டனர். மற்ற 6 பேரும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். மீட்கப்பட்ட 4 பேரும் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

தேடும் பணி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பரிசல் ஓட்டிகள் உதவியுடன் தீயணைப்பு படையினரும், போலீசாரும் காவிரி ஆற்றில் சென்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

6 பேர் பலி

இதனிடையே போலீசார் சுமார் 1 மணி நேர தேடுதலுக்குப்பின் கவுரி, குழந்தை தர்சன் ஆகியோருடைய உடல்களை மீட்டனர். அவர்களின் உடல்கள் பரிசல் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சித், கோகிலா, சுதிஷா ஆகிய 4 பேரை தேடும் பணி இரவு வரை நடைபெற்றது. இவர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உயிருடன் மீட்கப்பட்ட ராஜேஷ், கோமதி, சிறுவன் சச்சின் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
okenakkal 2
news by dailythanthi


0 comment(s) to... “ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்து 6 பேர் பலி”