அப்துல் கலாம் பெயரில் முதல் விருது : முதல்வருக்கு விஞ்ஞானி வளர்மதி நன்றி

Posted August 16, 2015 by Adiraivanavil in Labels:

சென்னை - அப்துல் கலாம் பெயரிலான முதல் விருதை தனக்கு வழங்கிய தமிழக அரசுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக பெண் விஞ்ஞானி வளர்மதி கூறியுள்ளார்.  சென்னையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசின் சார்பில் அப்துல்கலாம் விருதை அரியலூரை சேர்ந்த பெண் விஞ்ஞானி வளர்மதிக்கு
வழங்கினார். தனக்கு வழங்கப்பட்ட
விருது குறி்த்த வளர்மதி நிருபர்களிடம் கூறியதாவது: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருதை முதன்முதலாக பெற்ற பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த விருதினை வழங்கியதற்காக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான், அங்குள்ள நிர்மலா பள்ளியில் பள்ளிப் படிப்பு படித்தேன். இதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியிலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுநிலைப் படிப்பையும் படித்தேன். கடந்த 32 ஆண்டுகளாக இஸ்ரோ நிறுவனத்தில் பணியாற்றி . செயற்கைக்கோள்களை உருவாக்கி வருகிறேன். டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள விருதினை எனக்கு அளிப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இது என்னை ஊக்கப்படுத்துவதாக அமையும்.
என்னை கெளரவிப்பதன் மூலம், இஸ்ரோ நிறுவனத்தை தமிழக அரசு கெளரவப்படுத்தியுள்ளது. என்னுடைய மிகச்சிறந்த பணியாக நான் நினைப்பது கடந்த 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் ரிசாட் 1 ஆகும். இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனுடைய திட்ட இயக்குநராக பணியாற்றினேன். விமானங்கள்கூட ஊடுருவ முடியாத அடர்ந்த காடுகள் , குகைகள், நீர்ப்பரப்புகள் போன்றவற்றை படம் எடுக்கும் திறன் கொண்டது அந்த செயற்கைகோள். என்றார் வளர்மதி


0 comment(s) to... “அப்துல் கலாம் பெயரில் முதல் விருது : முதல்வருக்கு விஞ்ஞானி வளர்மதி நன்றி”