திருமாவளவனை கொல்ல சதி திட்டம்: பெட்ரோல் குண்டுகளுடன் 12 பேர் கைது

Posted August 21, 2015 by Adiraivanavil in Labels:
 பட்டுக்கோட்டை அருகே உள்ள வடசேரியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடைபெற இருந்தது. பின்னர் அவர் திருவாரூரில் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல இருந்தார்.
திருமாவளவன் வடசேரி வரக்கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த 40–க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வடசேரி ரவுண்டானா அருகில் போராட்டம் நடத்தினார்கள்.
தகவல் அறிந்து அங்கு வந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள். அப்போது போலீசாருக்கும் வாலிபர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தாக்கப்பட்டார். அவர் கையில் காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளுடன் நின்றுகொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்கள் 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
1. மணிகண்டன், 2. யோகேஸ்வரன், 3. அன்பானந்தம், 4. மதியழகன், 5. சக்தி என்கிற சேதுராமன், 6. வினோத்குமார், 7. கண்ணன், 8. மற்றொரு மணிகண்டன், 9 மணிமாறன், 10. மனோகரன், 11. திவாகர், 12. சரண்ராஜ்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது வடசேரிக்கு கொடியேற்று விழாவிற்கு வரும் திருமாவளவன் மீது பெட்ரோல் குண்டு வீச இருந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரிப்பு, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே திருமாவளவனை வடசேரிக்கு செல்ல வேண்டாம் என போலீசார் கூறி அவரை மன்னார்குடி வழியாக திருவாரூருக்கு திருமண நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் வடசேரி கொடியேற்று விழா நடைபெறவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

news malaimalar


0 comment(s) to... “திருமாவளவனை கொல்ல சதி திட்டம்: பெட்ரோல் குண்டுகளுடன் 12 பேர் கைது”