தஞ்சையில் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி கின்னஸ் சாதனை முயற்சி
Posted January 04, 2015 by Adiraivanavil in Labels: தஞ்சை
சாரண, சாரணியர் மாநாடு
சலேசியர்களின் நிறுவனரான தொன்போஸ்கோவின் 200-வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தொன்போஸ்கோவின் சாரண, சாரணியரின் மாநாடு தஞ்சையில் உள்ள தொன்போஸ்கோ பள்ளியில் கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. சாதி, மதம், இனம், மொழி, சமுதாய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தகர்த்து ஒரே சகோதரத்துவத்தை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொன்போஸ்கோ பள்ளியை சேர்ந்த சாரண- சாரணிய மாணவ- மாணவிகள் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது.
கின்னஸ் சாதனை
இதில் 4 ஆயிரம் மாணவ- மாணவிகள் காகித தொப்பி அணிந்து கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டனர். ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி நியூசிலாந்தில் சாரண- சாரணியர்கள் 3,045 பேர் பங்கேற்று காகிததொப்பி அணிந்தது கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக உள்ளது. தற்போது அதனை முறியடிக்கும் வகையில் 4 ஆயிரம் பேர் காகித தொப்பி அணிந்து பங்கேற்றனர்.
தொன்போஸ்கோ அணிந்திருந்த தொப்பியின் பெயர் பெரேத்தோ. அதை நினைவு கூறும் வகையில் அந்த தொப்பியின் வடிவில் மாணவ- மாணவிகள் காகித தொப்பியை தயார் செய்து அவர்கள் அணிந்திருந்தனர். இந்த தலைப்பாகை செய்ய பழைய செய்திதாள்களை பயன்படுத்துவதன் மூலம் மறுசுழற்சி செய்யும் கருத்தியலையும், பிரதமர் நரேந்திரமோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டு இருந்தது.
15 நிமிடம்
இதில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் 15 நிமிடம் தலைப்பாகை அணிந்து நின்றனர். இதை திருச்சி சலேசியர் சபையை சேர்ந்த ஆல்பர்ட்ஜான்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பரசுராமன் எம்.பி., ரெங்கசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் கோவி.மனோகரன் (ராமநாதபுரம்), வரதராஜன் (நீலகிரி), மாநகராட்சி கவுன்சிலர்கள் சண்முகபிரபு, ஹேமலதா மற்றும் பங்குத்தந்தையர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை அசிஸ்ட் உலக சாதனை ஆராய்ச்சி மைய தலைவர் ராஜேந்திரன், தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் அருண்தாமஸ் ஆகியோர் பாராட்டி சான்றிதழும் வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
நன்றி தினத்தந்தி
0 comment(s) to... “தஞ்சையில் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி கின்னஸ் சாதனை முயற்சி”