முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள்
உள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்களின் சாலைகள் நல்ல அகலம் கொண்டவை. தற்பொழுது தனியார் ஆக்கிரமிப்பால் பெரும் பாலான சாலைகள் சுருங்கி சந்துப்போல் காட்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் பேருந்துகள், லாரிகள் போன்ற வாகனங்கள் சென்ற பகுதி தற்பொழுது ஒரு ஆட்டோ கூட செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது. ஆட்டோ போன்ற வாகனங்கள் சென்ற சாலை தற்பொழுது நடந்து செல்லக்கூட முடியாத அவலத்தில் உள்ளது. இதில் பல சாலைகள் உதாரணமாக சொல்லப்படலாம். இந்த நிலையில் முத்துப்பேட்டையை ஒட்டிய பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பேட்டை கிராமத்தில் சுமார் 60 அடி கொண்ட சாலைகள் சமீப காலமாக சுருங்கி ஒரு வாகனம் செல்லும் அளவில் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் அடிக்கடி புகார் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பேட்டை சுமார் 50 அடி அகலம் கொண்ட சன்னதி தெருவில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் போட்டி போட்டுக் கொண்டு தனது வீட்டு முன்பு ஆக்கிரமித்து வேலிகள், சுவர்கள் எழுப்பி இருப்பதால் வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. சில இடங்களில் நடந்து செல்லக்கூட முடியாத அளவில் சாலை அந்த அளவுக்கு சுருங்கி உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சியிடம் பல முறை நேரில் கூறியும், புகார் மனுக் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ப்தியில் உள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பழனிச்செல்வம் கூறுகையில்: சன்னதி தெருவில் சில மாதங்களாக ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு சாலைகளை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் சுமார் 50 அடி சாலை தற்பொழுது 10 அடி சந்துப்போல் உள்ளது. லாரி சென்ற இப்பகுதியில் ஆட்டோ கூட வரமுடியவில்லை. இது குறித்து கடந்த 3 மாதமாக பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தேன். உடன் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள் தவிர எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது என்றார். இது குறித்து வெற்றி செல்வி கூறுகையில்: இப்பகுதியில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை பேரூராட்சி தடுத்து அகற்றாவிட்டால் வீதிக்கு வந்து நாங்கள் போராடுவோம் என்றார்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
பழனிசெல்வம்.