பில்வாரா, ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா அருகே கிராமப் பஞ்சாயத்தாரின் அட்டகாசத்தால் ஒரு 80 வயது பாட்டியை அநாகரீகமாக நடத்தியுள்ளனர் கிராம மக்கள். அந்தப் பாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மீது ஏற்றி கிராமத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று அவமதித்துள்ளனர். பில்வாரா மாவட்டத்தில் உள்ள கி கமேரி என்ற கிராமத்தில் இந்த அட்டகாசம் நடந்துள்ளது. காப் பஞ்சாயத்துக்கள் எனப்படும் இந்த கட்டப் பஞ்சாயத்துக் கும்பல் வட இந்திய கிராமப் புறங்களில் காலம் காலமாக அட்டகாசம் செய்து வருகின்றன. ஜாதி ரீதியாக இந்த கும்பல்களுக்கு பல அரசியல் வாதிகள் ஆதரவாகவும், உடந்தையாகவும் இருப்பதால்,சட்டத்தாலும், காவல்துறையினராலும் இவர்களை ஒழிக்க முடியவில்லை. இந்தக் கும்பல்களால் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையான தண்டனைக்குள்ளாகியுள்ளனர். ஆணாதிக்கம் மிக்க இந்த ஜாதி வெறிக் கும்பல்களுக்குக் கட்டுப்படாவிட்டால் அவமானங்களும், உயிரிழப்பும்தான் அப்பாவி மக்களுக்கு மிஞ்சுகிறது. பெரும்பாலும் தலித்துகள் இந்த கட்டப் பஞ்சாயத்துக் கும்பல்களிடம் சிக்கி சிதைந்து வருகின்றனர். கி கமேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 80 வயது மூதாட்டிக்கு சூனியக்காரி பட்டம் சூட்டி அவரை நிர்வாணப்படுத்தி கழுதை மீது ஏற்றி கிராமத்தை வலம் வரச் செய்ய இந்த பஞ்சாயத்துக் கும்பல் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதை அரங்கேற்றியுள்ளனர் கிராமத்தினர். அவரிடம் யாரும் பேசக் கூடாது என்றும் தடை விதித்துள்ளனர். மீறினால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்தக் கும்பல் எச்சரித்துள்ளது. இந்தப் பாட்டியின் கணவர் 37 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு பிள்ளைகளும் இல்லை. இந்தப் பாட்டிக்கு கிராமத்தில் ஒரு சிறு நிலம் உள்ளது. அதைப் பறிக்க சிலர் முயன்று வருகின்றனராம். இதற்காக அவரை கடந்த சிலவருடங்களாகவே அவர்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் தற்போது கழுதை மீது ஏற்றி ஊர்வலம் போகச் செய்து அவமதித்துள்ளனர் என்று கிராமத்தில் சிலர் கூறியுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு ராஜ்சமந்த் என்ற ஊரில் 50 வயதுப் பெண்ணை நிர்வாணப்படுத்தி கழுதை மீது ஏற்றி ஊர்வலம் போன கொடுமை நடந்தது என்பது நினைவிருக்கலாம்.