மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு!பரபரப்பு...

Posted March 14, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கொய்யாத்தோப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு மக்களின் அடிப்படை வசதிகளான
குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி போன்றவைகள் கிடையாது. இதனால் குடிநீருக்கு மக்கள் நீண்ட தூரம் சென்று எடுத்து வரும் சூழ்நிலையும், தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் முறையான சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் மற்றும் போக்கு வரத்துகள் செல்ல முடியாத சூழ்நிலையும், மழை வெள்ளம் காலங்களில் அப்பகுதி தனித்தீவு போன்று காணப்படுவதால் அப்பகுதியில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதி பொதுமக்கள் இது குறித்து பல்வேறு கோரிக்கைகளை செய்து தரவேண்டும் எனக்கோரி பல முறை புகார் மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று கொய்யா தோப்பு பகுதியைச் சேர்ந்த கமால், ஜலாலுதீன், உசேன் ஆகியோரது தலைமையில் ஆண், பெண் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு கொய்யா தோப்பிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரூராட்சி அலுவலகம் வந்து முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் மற்றும் செயல் அலுவலர் சித்தி விநாயகமூர்த்தி ஆகியோரிடம் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அதற்கு தலைவர் மற்றும் செயல் அலுவலர் விரைவில் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். அதனால் திரண்டு வந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது குறித்து கமால் கூறுகையில்: பல ஆண்டுகளாக கொய்யா தோப்பு பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகளும் பேரூராட்சி நிர்வாகம் இதுநாள் வரை செய்து தரவில்லை. இது குறித்து பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதனால் எங்கள் பகுதி மக்கள் எல்லோரும் திரண்டு வந்து பேரூராட்சியை முற்றுகையிட்டு தலைவர், செயல் அலுவலரிடம் மனு அளித்தோம். அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் மேற்கொள்ளுவோம் என்றார்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை



0 comment(s) to... “மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு!பரபரப்பு...”