முத்துப்பேட்டையில் 22 கிலோ தங்கம் பறிமுதல்-3 பேர் சிக்கினர்
Posted March 26, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோரமுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தங்கக் கடத்தல் அதிகம் நடப்பதாக மத்திய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சென்னை, திருச்சி, கோவை, தூத்துக்குடி சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இந்த சாலையில், கடந்த 2 தினங்களாக முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள பேட்டை என்ற இடத்தில் இருந்து பிரவுன் நிற மாருதி கார் முத்துப்பேட்டை வந்து அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தது.
காருக்கு முன்னால் புதுச்சேரி பதிவெண் கொண்ட 2 பைக்குகளில் தமிழக போலீஸ் சீருடை அணிந்த 2 பேர் சென்று கொண்டிருந்தனர். கார் கோவிலூர் பைபாஸ் என்ற இடத்தில் வந்தபோது அந்த பகுதியில் 2 கார்களில் இருந்த 5க்கும் மேற்பட்ட கோவை சுங்க அதிகாரிகள் அந்த காரை நிறுத்தினர். இதைக் கவனித்த போலீஸ் சீருடையில் இருந்த 2 பேர் பைக்கில் வேகமாக சென்று விட்டனர்.
காரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் டிரைவர் சுதாகர் மற்றும் வேதாரண்யத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் சுதாகர்(23), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வைத்தியநாதன் மகன் மோகன் (25) ஆகியோர் இருந்தனர்.
அவர்களை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு காரை சோதனையிட்டனர். காருக்குள் சீட்டுக்கு அடியில் ஒரு பையில் 22 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இவை எங்கிருந்து வந்தன, எங்கே செல்கிறது, யாருக்கு கொண்டு செல்கிறீர்கள் என அதிகாரிகள் விசாரித்தனர்.
பின்னர் அவர்களை திருவாரூரில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். டிரைவர் சுதாகர் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன். பிடிபட்ட 3 பேரும் கமிஷன் அடிப்படையில் இந்த தங்கத்தை சென்னைக்கு கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டவர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
பிடிபட்ட 22 கிலோ தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.5.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தங்கத்தை சென்னைக்கு எடுத்து செல்வதில் பல்வேறு குழுக்கள் ஈடுபடுமாம். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தூரம் வரை எடுத்து செல்வர். அந்த தூரம் வந்ததும் வேறு வாகனத்தில் தங்கம் மாற்றப்பட்டு எடுத்துச்செல்லப்படுமாம்.
இவை இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவும், சென்னைக்கு கொண்டு சென்றபோது பிடிபட்டதாகவும் தெரிகிறது. கடந்த ஒன்றரை வருடத்தில் மட்டும் கிழக்குகடற்கரை சாலையில் நடந்த சோதனையில் 80 கிலோ தங்கம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள், ம.சுதாகர், மோகன் மற்றும் டிரைவர் சுதாகர் ஆகியோரை கைது செய்தனர்.
தங்கம் கடத்த பயன்படுத்தப்பட்ட கார்.
கைதான 3 பேர் 
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் 22 கிலோ தங்கம் பறிமுதல்-3 பேர் சிக்கினர்”