முத்துப்பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் சென்ற ஆண்டு மாடுகளுக்கு கோமாரி நோய் ஏற்ப்பட்டு நூற்றுக்கணக்கான மாடுகள் இறந்தன. அதனால்
இந்த ஆண்டு கோமாரி நோய் வராமல் இருக்க கால்நடை பராமரிப்பு துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு இடங்களில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முத்துப்பேட்டை பகுதியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி கால்நடைகளுக்கான 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. வருகிற 21ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த முகாம். சமீபத்தில் மன்னார்குடி கோட்ட உதவி இயக்குனர் டாக்டர்.லூர்துசாமி மேற்பார்வையில் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட இடும்பாவனம், விளாங்காடு, கரையாங்காடு பகுதியில் நூற்றுக்கணக்கான கிடை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஒன்றிய கால்நடை மருத்துவக் குழுவினரால் போடப்பட்டது. தற்போது முத்துப்பேட்டை பகுதியில் அறுவடை முடிந்து விவசாய நிலங்களில் மாடுகளை கிடை சேர்த்து உள்ளனர். விவசாய நிலங்களில் எஞ்சியுள்ள வைக்கோல், புல் போன்றவை கால்நடைகளுக்கு உணவாகவும், கால்நடைகளின் சாணம் உரமாகவும் பயன்படுகிறது, மேலும் கிடைகளில் காளை மாடுகளும் இருப்பதால் கிடைகளுக்கு அனுப்பப்படும் பசுக்கள் இயற்கையாக கருத்தறிக்க வாய்ப்புள்ளதால் பெரும்பாலான கால்நடை வளர்ப்போர் தற்போது தங்களுடைய மாடுகளை கிடைகளில் மேய்ச்சலுக்கு அனுப்பியுள்ளனர். அனைத்து மாடுகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளதால் முத்துப்பேட்டை பகுதியில் கால்நடை மருத்துவக்குழுவினர் பசு கிடைகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட்டுவருகின்றனர். இந்த நிலையில் நேற்று முத்துப்பேட்டை அடுத்த கரையாங்காடு பகுதியில் மோகன்தாஸ் என்பவர் சேர்த்துள்ள கிடையிலுள்ள 729 மாடுகளுக்கு கால்நடை மருத்துவக்குழுவினரால் தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக விளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கு.ஜெயராமன் தலைமையேற்று தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார். முகாமில் ஊராட்சி மன்ற ஊறுப்பினர் சக்திவேல், முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் கங்காசூடன், கால்நடை மருத்துவர்கள் தெய்வவிருதம், சந்தோஷ், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர்கள் வடிவேலு, நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பவானந்தம், ராஜேந்திரன், வீரமணி, தமிழ்செல்வி, ரசியா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
படம்செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை