பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்கள் குடியேறும் போராட்டம்
Posted April 10, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
குளத்தின் கரையோரம் பேரூராட்சியின் துப்புரவு பணியாளர் சுமார் 25 குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்கள். இங்கே இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு மின்சாரம், தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்பட அனைத்தும் பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்ற ஆண்டு பட்டரை குளத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக குளத்தை ஆக்கிரமித்து பேரூராட்சி நிர்வாகம் ரூபாய் 27 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து தடுப்பு சுவர் கட்ட பணியை தொடங்கியது.
இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பேரூராட்சி நிர்வாகம் பணியை நிறுத்தாமல் கட்டி முடித்தது. இதனை எதிர்த்து முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முறைகேடாக குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவரையும், சுற்றுபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் பலமுறை கால அவகாசம் பெறப்பட்டது. அதன் பின்னர் சென்ற மாதம் மீண்டும் வருகிற ஏப்ரல் 23–ந்தேதிக்குள் ஆக்கிரமிப்பு முழுவதையும் பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பேரூராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தியது.
இந்தநிலையில் பாதிக்கப்படும் துப்புரவு பணியாளர்கள் மாற்று இடம் தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். இதனைதொடர்ந்து போராட்டம் அறிவித்த துப்புரவு பணியாளர்களிடம் மன்னார்குடி ஆர்.டி.ஓ. செல்வசுரப்பி, திருத்துறைப் பூண்டி தாசில்தார் மதியழகன், பேரூராட்சி செயல் அலுவலர் சித்தி விநாயக மூர்த்தி, பேரூராட்சி தலைவர் அருணாச்சலம், ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கோவிலூர் பைப்பாஸ் சாலையில் மாற்று இடம் தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்படி நேற்று காலை துப்பரவு பணியாளர்கள் சுமார் 50 பேர் கோவிலூர் பகுதியில் காத்திருந்தனர். மதியம் 2 மணி வரை மாற்று இடம் தர அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலக வளாகத்துக்குள் குடியேறி சமையல் செய்து சாப்பிட்டனர். பின்னர் பாய் விரித்து குடும்பத்துடன் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு மக்கள் கூட்டமாக கூடினர். பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்ட துப்புரவு பணியாளர்களிடம் திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் தனசேகரன், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் வெற்றி, செந்தில், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அவர்கள் அதிகாரிகளை சந்தித்து உடனே மாற்று இடம் பெற்று தருவோம். இந்த ஆக்கிரமிப்பு வழக்கை கட்சி சார்பில் எதிர் கொள்ளுவோம் என்று உறுதி கூறினர். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து முத்துப்பேட்டை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் இன்றும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
0 comment(s) to... “ பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்கள் குடியேறும் போராட்டம்”