பட்டுக்கோட்டையில் பெண் தூக்கிட்டு தற்கொலை:கோட்டாட்சியர் விசாரணை

Posted April 11, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, சைதாப்பேட்டை, சின்னமலை பகுதியைச் சேர்ந்த செல்லையா மகள் மலர்விழி (29). இவருக்கும், பட்டுக்கோட்டை அல்லாகோயில் தெரு பாக்கியம் நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் சந்தோஷ் (எ) கார்த்திகேயனுக்கும் கடந்த 28.10.2009-ல் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கார்த்திகேயனுக்கு திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகைகள், பணம் மற்றும் சீர்வரிசைப் பொருள்கள் வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்டதாம்.
திருமணத்திற்குப் பிறகு பட்டுக்கோட்டையில் கணவர் வீட்டில் வசித்து வந்த மலர்விழி வியாழக்கிழமை (ஏப்.9) இரவு வீட்டு உத்திரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, மலர்விழியின் தாய் சிந்தாமணி, பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரில், கடந்த சில மாதங்களாக கார்த்திகேயன், அவரது தந்தை முத்துசாமி, தாய் சாந்தி ஆகிய மூவரும் வரதட்சிணையாக மேலும் பணம், நகைகள் வாங்கி வரும்படி மலர்விழியை துன்புறுத்தியுள்ளனர். அதனால்தான் மலர்விழி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மலர்விழி மரணத்திற்கு வரதட்சிணைக் கொடுமை காரணமா என்பது குறித்து பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அரங்கநாதனும் விசாரித்து வருகிறார்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் பெண் தூக்கிட்டு தற்கொலை:கோட்டாட்சியர் விசாரணை”