
சேதுபாவாசத்திரம் அருகே பின்கழுத்தில் காயத்துடன் விவசாயி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது45). விவசாயி. இவருக்கு மலர்கொடி (40) என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று மாலை 5 மணியளவில் சேகர் வீட்டுக்கு வந்த 2 பேர் அவரை அருகே உள்ள ஒரு பகுதியில் நடைபெற உள்ள பஞ்சாயத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைத்தனர். அப்போது சேகர் அவர்களிடம் நீங்கள் முதலில் செல்லுங்கள், நான் பின்னே வருகிறேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் சேகர் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றார். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் சேகரை அனைத்து பகுதிகளிலும் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று அதிகாலை தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பூக்கொல்லையிலிருந்து கழனிக்கோட்டைக்கு செல்லும் சாலை ஓரத்தில் சேகர் பிணமாக கிடந்தார். இவர் ஓட்டி சென்ற சைக்கிள் அருகே உள்ள ஆற்றுக்குள் கிடந்துள்ளது. சேகரின் பின் கழுத்தில் காயம் உள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேராவூரணி போலீசார் சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேகரின் பின் கழுத்தில் காயம் உள்ளதால் அவரது சாவில் மர்மம் உள்ளதாக அவரது மனைவி மலர்கொடி பேராவூரணி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.