அதிரை அருகே மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்-துறைமுக விரிவாக்க பணி தாமதம்
Posted September 24, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே துறைமுகம் அமைக்க இடம் தந்தவர்களுக்கு இழப்பீடு வழங்ககோரி மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கினர்.
அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் தாஜூதீன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காசிநாதன், மருதமுத்து, அகமதுசாபிக், இப்ராகிம், முகமதுராபிக், ராஜ்குமார், பாலசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் பகுதியில் துறைமுகம் அமைப்பதற்காக அரசின் உத்தரவின்படி மீனவர்கள் இடத்தை காலி செய்து கொடுத்திருக்கிறோம். அந்த இடத்தை அலுவலர்கள் சரியாக கணக்கீடு செய்யவில்லை. துறைமுகம் அமைக்க இடம் தந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை கூட இதுவரை வழங்கவில்லை. இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். துறைமுகம் அமைப்பதற்காக இடங்களை காலி செய்து கொடுத்து ஒரு ஆண்டு ஆகி விட்டது. இதுவரை துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கவில்லை. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை செல்லும் மல்லிப்பட்டினத்தில் நவீன வசதிகளுடன் மருத்துவமனை அமைக்க வேண்டும். மீனவர்களுக்கு டீசல் வழங்குவதற்கு பழைய முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, கோரிக்கைகள் நிறைவேறாத கட்டத்தில் வருகிற 10–ந் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபடுவது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் பகுதி மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் மீனவர்களின் படகுகள் மல்லிப்பட்டினம் கடல் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
0 comment(s) to... “அதிரை அருகே மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்-துறைமுக விரிவாக்க பணி தாமதம்”