முத்துப்பேட்டை அடுத்த பேட்டை பகுதியில் கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வயல் மற்றும் தென்னை தோப்புகள் போன்ற ஏராளமான இடங்கள் உள்ளன. இதனை பெம்பாலான இடங்களை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு
கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புளாக மாறி வருகிறது. இந்த நிலையில் பேட்டை பூங்கா எதிர்புறம் கோரையாற்று ஓரம் உள்ள கோவிலுக்கு சொந்தமான சர்வே எண்: 277-ல் 2 ஏக்கர் 79 சென்ட் தென்னந்தோப்பு அப்பகுதியைச் சேர்ந்த தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர். அதே போன்று பேட்டை செக் போஸ்ட் எதிர்புறம் உள்ள கோவிலுக்கு சொந்தமான சர்வே எண்: 417-ல் 3 ஏக்கர் 34 சென்ட் தென்னந்தோப்பையும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தனியார் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர். இதனை இந்து அறநிலைத்துறையும், கோவிலூர் கோவில் நிர்வாகமும் கண்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்த இரு இடங்களையும் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் வேறொரு நபருக்கு விலை பேசி விற்பனை செய்து உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து வாங்கிய நபர்கள் அந்த இடங்களை பிளாட் போட்டு விற்பனை செய்ய அதில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளை அதிரடியாக காலி செய்ய கூறியுள்ளனர். அதற்கு அந்த இடங்களில் குடியிருப்பவர்கள் காலி செய்ய மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலையும் இதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருந்து வந்தது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்து அறநிலைதுறைக்கும், கோவிலூர் கோவில் நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோவிலூர் கோவில் நிர்வாகத்தினர் அதிரடியாக அந்த இரு இடங்களையும் கைப்பற்றி அதில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்றும் நிலத்தில் அத்து மீறி நுழைபவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என எச்சரிக்கை வாசகம் எழுதிய அறிவிப்பு போர்டு வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
படம் செய்தி:
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை