தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு வங்கிகள் மூலம் ரூ.4,897 கோடி விவசாய கடன் கலெக்டர் சுப்பையன் தகவல்

Posted June 26, 2015 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு வங்கிகள் மூலம் ரூ.4 ஆயிரத்து 897 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுப்பையன்
கூறினார்.வங்கியாளர்கள் கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் சுப்பையன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிதாக தொழில் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். இது போன்ற திட்டங்களுக்கு வங்கிகள் முழு அளவில் ஆதரவு அளிக்க வேண்டும். குறிப்பாக தொழில் முனைவோருக்கு உடனடியாக கடனுதவி வழங்க வேண்டும். நலிவடைந்தவர்கள், சிறுபான்மையினர், பெண்கள், பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மற்றும் மலைசாதியினர் முன்னேற்றத்துக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வங்கிகள் வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வங்கிகள் கடந்த 3 மாதங்களில் முந்தைய மாதங்களை விட அதிக அளவில் நிதி வழங்கி பல்வேறு கடனுதவிகளை வழங்கி உள்ளது. இது தொடர வேண்டும்.

குறிப்பாக பயிர்க்கடன், கறவை மாடு கடன் உள்ளிட்ட கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கறவை மாட்டுக்கடன் இன்னும் சற்று கூடுதலாக வழங்க வேண்டும். மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் தொடங்க வழங்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஜூலை 10-ந்தேதிக்குள் கடன் அனுமதி வழங்க வேண்டும்.

விவசாய கடன்

வங்கிகள் மூலம் கடந்த ஆண்டில் விவசாய கடன் ரூ.4 ஆயிரத்து 893 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.4 ஆயிரத்து 897 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மற்றும் மலைசாதியினருக்கு கடந்த ஆண்டில் ரூ.263 கோடியும், நடப்பாண்டில் ரூ.267 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு கடந்த ஆண்டில் ரூ.ஆயிரத்து 299 கோடியும், நடப்பாண்டியில் ரூ. ஆயிரத்து 339 கோடியும், சிறுபான்மையின மக்களுக்கு கடந்த ஆண்டில் ரூ.621 கோடியும், நடப்பாண்டில் ரூ.707 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. நலிவடைந்தோருக்கு கடந்த ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 647 கோடியும், நடப்பாண்டில் ரூ.2 ஆயிரத்து 879 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சித்தார்த்தன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் பாலு, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுப்பிரமணியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் கஜேந்திரநாதன், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சிவக்குமார் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர். 


0 comment(s) to... “தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு வங்கிகள் மூலம் ரூ.4,897 கோடி விவசாய கடன் கலெக்டர் சுப்பையன் தகவல்”