பேராவூரணியில் பணத்தை மாற்ற முடியாமல் காத்து கிடக்கும் பொதுமக்கள்

Posted November 14, 2016 by Adiraivanavil in Labels:
பேராவூரணி நவ 14-
பேராவூரணியில் வங்கிகளில் பணத்தை மாற்ற முடியாமல் பொதுமக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். ஞாயிறு அன்றும் நீண்ட வரிசையில் வங்கி முன்பு பொதுமக்கள் காத்திருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொதுமக்களுக்கு போதிய அவகாசம் தராமல் திடீரென 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், "பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்" என தெரிவித்தது.பேராவூரணியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, லெட்சுமி விலாஸ் வங்கி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி, கனரா வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாண்டியன் கிராம வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என எட்டுக்கும் மேற்பட்ட பொதுவுடமை மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன
கடந்த 4 தினங்களாக பொதுமக்கள் தங்களிடம் உள்ள சேமிப்பு பணங்களை மாற்றவும், டெபாசிட் செய்யவும் வங்கிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இவர்களில் முதியோர், பெண்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பலரும் காலை 6 மணி முதலே வங்கி வாசலில் தவம் கிடந்து வருகின்றனர். இவர்களில் பலர் நாள் கூலிக்கு தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் உண்டு.ரிசர்வ் வங்கி தரப்பிலும், பொதுவுடமை வங்கிகள் தரப்பிலும் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு, அதிகளவில் பணியாளர்கள் செயல்படுவார்கள் என அறிவிப்பு செய்தாலும், அது வெற்று அறிவிப்பாகவே உள்ளது.
ஏராளமான வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் இப்பகுதி வங்கிகளில் திரண்டிருப்பதாலும், போதிய ஊழியர்கள் இல்லாததாலும் வங்கிப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.பணத்தை மாற்ற நாள் கணக்கில் அலைந்து திரிய வேண்டியுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

போதிய பணம் விநியோகம் இல்லை

பொதுமக்கள் செலுத்தும் 500, 1000 த்தை டெபாசிட்டாக வரையறையின்றி பெறும் வங்கிகள், புழக்கத்தில் விட 10, 20, 50, 100 ரூபாய் தாள்களை குறைந்த அளவிலேயே வழங்குவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போதிய அளவில் வங்கிகளுக்கு சில்லறை பணங்கள் வரவில்லை என கூறப்படுகிறது. ஆவணம், பூக்கொல்லை ஆகிய இடங்களில் உள்ள ஐஓபி வங்கியில் பெயரளவிற்கே வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்குவதாக கூறப்படுகிறது.
வியாபாரம் பாதிப்பு 
தங்களிடம் உள்ள செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வியாபாரிகளிடம் கொடுத்தால், வியாபாரிகள் பெற மறுக்கின்றனர். அவர்கள் திரும்ப வழங்க நூறு, ஐம்பது ரூபாய் தாள்களும் பற்றாக்குறையாக உள்ளது. பெட்ரோல் பங்க், மருத்துவமனை, மெடிக்கல் ஷாப், டாஸ்மாக் கடைகள், அரசு பேருந்துகள் உள்ளிட்ட பல இடங்களிலும் செல்லாத 500, 1000 நோட்டுகளை பெற மறுக்கின்றனர்.
இதனால் பொதுமக்களுக்கும் கடைக்காரர்களுக்கும் தேவையில்லாத வாக்குவாதங்களும், கைகலப்பும் ஏற்படுகிறது. கடந்த 4 நாட்களாகவே கடை திறந்தும் வியாபாரம் இல்லாத நிலையே உள்ளது. முகூர்த்த காலமாக இருப்பதால், பொதுமக்கள் பொருட்களை வாங்க திண்டாடி வருகின்றனர். மருத்துவமனை, உணவகங்கள் ஆகிய இடங்களில் கொடுக்க செல்லுபடியாகும் பணம் இல்லாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
சந்தை பாதிப்பு 
நேற்று ஞாயிற்றுக்கிழமை பேராவூரணியில் பிரபலமான வாரச்சந்தை கூடியது. வியாபாரிகள் பொதுமக்கள் கொடுத்த செல்லாமல் போன நோட்டுக்களை வாங்க மறுத்தனர். இதனால்  வாரச்சந்தை பெருமளவில் பாதிக்கப்பட்டதுசிறு விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
பொதுமக்கள் கோரிக்கை 
இதுகுறித்து அச்சக உரிமையாளரும் திராவிடர் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளருமான மல்லிகை வை.சிதம்பரம் கூறுகையில், " மத்திய அரசின் சரியான முன்யோசனையின்றி அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தால் கருப்பு பண முதலைகள் எளிதாக தப்பிச் செல்வர். ஆனால் அன்றாடங்காய்ச்சிகளான பொதுமக்கள் தான் அவதிப்படுகின்றனர். வங்கிகளில் அறிவிப்போடு நின்று விடாமல் கூடுதலான கவுண்டர்களை திறந்து தேவையான அளவில் பணத்தை விநியோகம் செய்யவேண்டும். சரியான மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்யவேண்டும். மாவட்ட ஆட்சியரும் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.




0 comment(s) to... “பேராவூரணியில் பணத்தை மாற்ற முடியாமல் காத்து கிடக்கும் பொதுமக்கள் ”