உலகம் முழுவதும் பரவி வரும் ‘ஜிகா’ வைரஸ் தடுப்பூசியே கிடையாது என்பதால் இந்தியாவில் பீதி
Posted January 28, 2016 by Adiraivanavil in Labels: தமிழகம்
ஜிகா வைரஸ்
ஒருபுறம் விஞ்ஞானம் வளர வளர, மறுபுறம் புதிய புதிய நோய்க்கிருமிகளும் உருவாகி வருகின்றன. டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கிருமியின் பெயர் ‘ஜிகா’ வைரஸ். 1947–ம் ஆண்டு உகாண்டாவில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது.
சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
மூளை பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள்
பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3 ஆயிரத்து 500 குழந்தைகள் இதுபோன்று பிறந்திருப்பதால், இதற்கும், ‘ஜிகா’ வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தொடக்க காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இருந்ததால், மூளை பாதிப்புக்கும், அதற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழவில்லை. சமீபகாலமாகவே, இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனென்றால், கர்ப்பிணி பெண்களின் தொப்புளை தாக்கும் ‘ஜிகா’ வைரஸ், அதன்வழியாக, கருவில் இருக்கும் சிசுவின் மூளைக்கு செல்லக்கூடியது.
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
‘ஜிகா’ வைரஸ், அமெரிக்கா முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த கிருமி தாக்கியவர்கள், இதுவரை குணமானது இல்லை. இதற்கு தடுப்பூசியும் கிடையாது.
இந்தியாவில், இக்கிருமி தாக்கியதாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. அதனால், மத்திய அரசு எந்த உஷார் நடவடிக்கையும் பிறப்பிக்கவில்லை.
இருப்பினும், கர்நாடக அரசு, மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு தனது சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதார இயக்குனர் வாமதேவா கூறியதாவது:–
டெங்கு, சிக்குன்குனியாவுக்கு எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளே இதற்கு போதுமானவை. டெங்கு தாக்கியவர்களின் ரத்த மாதிரி ‘ஜிகா’ வைரஸ் சோதனைக்கும் அனுப்பப்படும். இதற்காக, புனேவில் உள்ள தேசிய தொற்றுநோய் பரிசோதனை நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குளிர் காலத்தில், இந்நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்றபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏடிஸ் கொசுக்கள்
டெங்கு, சிக்குன்குனியாவைப் போலவே, ‘ஜிகா’ கிருமியும், ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. இந்த வகை கொசுக்கள் பகலில்தான் கடிக்கும். பாத்திரம், டயர் போன்றவற்றில் தேங்கி உள்ள நன்னீரில், இக்கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். ஆகவே, பாத்திரங்களை மூடி வைக்குமாறும், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
‘ஜிகா’ வைரஸ் தாக்கினால், டெங்கு காய்ச்சலுக்குரிய அறிகுறிகளே காணப்படும். அதாவது, ஒரு வாரத்துக்கு கடுமையான காய்ச்சல் நீடிக்கும். தோலில் கொப்புளம் ஏற்படும். கண்கள் சிவந்து விடும். மூட்டு வலி, உடல் அசதி, தலைவலி ஏற்படும்.
தடுப்பு முறைகள்
இதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க, உடல் முழுவதும் மூடும் வகையில் ஆடை அணிய வேண்டும். ஜன்னல்களில் திரை போட்டிருக்க வேண்டும். பகல் நேரத்திலும், ஜன்னல் மற்றும் வீட்டு கதவை மூடி வைத்திருக்க வேண்டும். கொசு வலைக்குள்தான் படுத்து தூங்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
0 comment(s) to... “உலகம் முழுவதும் பரவி வரும் ‘ஜிகா’ வைரஸ் தடுப்பூசியே கிடையாது என்பதால் இந்தியாவில் பீதி”