கீரமங்கலத்தில் 81 அடி உயர சிவன்-7¼ அடி நக்கீரர் சிலைகள் இன்று திறப்பு விழா

Posted January 20, 2016 by Adiraivanavil in Labels:
கீரமங்கலத்தில் 81 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன், 7¼ அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நக்கீரர் சிலைகள் இன்று திறந்து வைக்கப்படுகிறது.

நக்கீரமங்கலம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலத்தில் பழம்பெருமை மிக்க மெய்நின்றநாதர் சுவாமி கோவில் உள்ளது. கீரமங்கலம் பழங்காலத்தில் நக்கீரமங்கலம் என்ற பெயருடன் விளங்கியுள்ளது. பிற்காலத்தில் அப்பெயர் மறுவி கீரமங்கலம் என்று மாறியுள்ளது. சங்க இலக்கியத்தில் ‘நக்கீரமங்கலத்தில் நின்ற சிவனுக்கு 5 கலஞ்சு“ என்ற பாடல் வரி வருகிறது. அந்த வரியில் குறிப்பிடப்பட்டுள்ள நக்கீரமங்கலம் என்பது தற்போதுள்ள கீரமங்கலமே ஆகும்.

மெய்நின்றநாதர் சுவாமி கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் கோவிலுக்காக நிலம், பொருள் உள்ளிட்டவற்றை தானம் கொடுத்தவர்களின் பட்டியல் உள்ளது. மேலும் 800 ஆண்டுகளுக்கு முன்பு மெய்நின்றநாதருக்கும், ஒப்பிலாமணி அம்மைக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

நக்கீரருக்கு பதில்

சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றில் பெண்களின் கூந்தல் தொடர்பாக இறைவன் இயற்றிய “கொங்கு தெர் வாழ்க்கை அஞ்சிரை தும்பி“ என்ற பாடல் தொடர்பாக மதுரையில் பாண்டிய மன்னன் அவையில் சிவனுக்கும், தலைமை புலவர் நக்கீரருக்கும் தர்க்கம் நடந்த பின்னர், நக்கீரமங்கலத்தில் மெய்நின்றநாதர் கோவிலுக்கு வந்த நக்கீரர் எதிரே உள்ள தடாகத்தில் நீராடி ஈர உடலுடன் சிவனை நோக்கி “நான் கேள்வி கேட்டத்தில் தவறு உள்ளதா“ என்று கேட்டதாக சங்க இலக்கியங்களின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், அதற்கு, மெய்யே உறைக்கும் மெய்நின்றநாதராக இருக்கும் சிவன், உன் கேள்வியில் தவறு இல்லை என்று நக்கீரரிடம் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

சிவனுக்கு சிலை

இத்தகைய சிறப்புகள் கொண்ட கீரமங்கலத்தில் மெய்நின்றநாதர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமானுக்கு சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மெய்நின்றநாத சுவாமி கோவிலின் எதிரில் பராமரிப்பு இன்றி கிடந்த பெரியகுளத்தை சீரமைத்து தடாகம் அமைத்து, குளத்தின் நடுவில் 27 அடி உயர பீடத்தில், 54 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் மொத்த உயரம் 81 அடி ஆகும். மேலும் சிவனிடம் கேள்வி கேட்ட நக்கீரருக்கு, சிவன் சிலைக்கு சிறிது தூரத்தில் 7¼ அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகளின் திறப்பு விழா இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கு.ப.கிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, சிவன் மற்றும் நக்கீரர் சிலைகளை திறந்து வைக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் என்.ஜெகஜோதி, செயலாளர் சோ.துரை, பொருளாளர் டி.ராமன் மற்றும் கிராம மக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசார் செய்து வருகின்றனர்.

உயரமான சிலை

கீரமங்கலம் அமைக்கப்பட்டுள்ள சிலைகளால், இனி வரும் காலங்களில் இந்தப் பகுதியில் வரலாற்று ஆய்வாளர்கள் அதிகமாக ஆய்வுகள் செய்து, மேலும் பல வரலாறுகள் பற்றிய தகவல்கள் வெளிவரலாம் என்று சிலை அமைப்புக்குழுவினர் கூறினார்கள். மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள சிலை தென்னகத்திலேயே மிக உயரமான சிவன் சிலை என்றும், விழாக்குழுவினர் கூறினார்கள். 


0 comment(s) to... “கீரமங்கலத்தில் 81 அடி உயர சிவன்-7¼ அடி நக்கீரர் சிலைகள் இன்று திறப்பு விழா”