அரசு பஸ்களில் பொருத்தியாச்சு கேமரா... ஜேப்படி, சில்மிஷ ஆசாமிகளுக்கு 'செக்
Posted January 25, 2016 by Adiraivanavil in Labels: தமிழகம்
சென்னையில் அரசு பஸ் பயணம் என்றாலே மக்களுக்கு ஒரு திகல் பயணமாகவே இருப்பதாக பயணிகள் தரப்பில் சொல்கிறார்கள். ஏனெனில் நிறைமாத கர்ப்பிணி போல கூட்ட நெரிசலில் சிக்கி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் பீக்அவர்ஸில் சொல்லவே வேண்டாம். பஸிசில் ஏறவே முடியாது. குறிப்பாக பெண்களின் நிலைமை அந்தோ பரிதாபம்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பிக்பாக்கெட் திருட்டு சம்பவங்கள், பெண்களைத் தொந்தரவு செய்யும் இடிமன்னர்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதைவிட பஸ்சில் 'ரூட் தல' பிரச்னையால் மோதல் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகம் நடக்கின்றன. கல்லூரி மாணவர்களுக்கு இடையே அரங்கேறும் இந்த 'ரூட் தல' பிரச்னையில் புத்தகம் ஏந்தும் கைகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அலையும் நிலைக்கு சில மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதோடு கண்டக்டர், டிரைவர்களுடன் பயணிகளுக்கு இடையே மோதல் சம்பவங்களும் நடக்கின்றன. இதுபோன்று அரசு பஸ் பயணத்தின் போது நடைபெறும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அயனாவரத்திலிருந்து பெசன்ட்நகர் செல்லும் பஸ் (வழித்தடம் எண் 23சி), அடையாறிலிருந்து தரமணி செல்லும் பஸ் (5சி) மற்றும் பிராட்வேயிலிருந்து பூந்தமல்லி செல்லும் அரசு பஸ் ஆகியவை உள்பட 20 பஸ்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்களில்தான் அதிகளவில் பிரச்னை இருந்து வந்தன என்பதால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழக வட்டாரங்கள் கூறுகையில், "சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 806 வழித்தடங்களில் 3,798 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பயணிகள் தரப்பிலிருந்து நாள் தோறும் எங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்பான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதைத்தடுக்க பிரச்னைக்குரிய வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளன. டிரைவரின் சீட்டின் பின் புறத்திலும், பஸ்சில் கடைசி இருக்கையிலும், பஸ்சின் இரண்டு நுழைவு வாயில்கள் என ஒரு பஸ்சில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைகள் மூலம் பஸ்சுக்குள் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் ஓரளவு பார்க்க முடியும். பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டால் கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகள் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும். தொடர்ந்து அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
-எஸ்.மகேஷ்
படங்கள்:ப.சரவணகுமார்
0 comment(s) to... “அரசு பஸ்களில் பொருத்தியாச்சு கேமரா... ஜேப்படி, சில்மிஷ ஆசாமிகளுக்கு 'செக்”