வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் சுப்பையன் வழங்கினார்

Posted January 20, 2016 by Adiraivanavil in Labels:
சாலை பாதுகாப்பு வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் சுப்பையன் பரிசுகளை வழங்கினார்.

போட்டிகள்

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. 

கட்டுரைப்போட்டியில் தஞ்சை பி.வி.செல்வராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவி சூர்யா முதலிடத்தையும், தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிருந்தா 2-ம் இடத்தையும், வளப்பக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சிவகாமி 3-ம் இடத்தையும் பெற்றனர்.

வாசகப்போட்டியில் தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி முதலிடத்தையும், தஞ்சை வீரராகவ மேல்நிலைப்பள்ளி மாணவி சக்திவேல் 2-ம் இடத்தையும், வளப்பக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி வித்யபாரதி 3-ம் இடத்தையும் பெற்றனர். பேச்சுப்போட்டியில் தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளி மாணவி சிவசங்கரி முதலிடத்தையும், திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி மாணவி யோகப்பிரியா 2-ம் இடத்தையும், தஞ்சை பி.வி.செல்வராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா 3-ம் இடத்தையும் பெற்றனர்.

பரிசளிப்புவிழா

ஓவியப்போட்டியில் தஞ்சை பி.வி.செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெனபிரியா முதலிடத்தையும், திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிளாதேவி 2-ம் இடத்தையும், தஞ்சை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் லட்சுமணன் 3-ம் இடத்தையும் பெற்றனர். 

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்புவிழா தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீதமகாலில் நேற்றுமாலை நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுப்பையன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன், சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை போக்குவரத்து ஆணையர் முனிராஜ் வரவேற்றார்.

விழாவில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்குமார், ஆய்வாளர்கள் பிரபாகரன், விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


0 comment(s) to... “வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் சுப்பையன் வழங்கினார்”