கோடை வெப்பத்தை விரட்டும் வழிமுறைகள்...

Posted January 30, 2016 by Adiraivanavil in Labels:
கோடை காலம் நெருங்க சில மாதங்கள் இருந்தாலும், இப்போதிலிருந்தே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. அலுவலக பணியாளர்கள் பெரும்பாலானோர் குளுகுளு ஏ.சி.யில் அமர்ந்து கொண்டு தப்பிவிடுகிறார்கள். ஆனால் இல்லத்தரசிகள் அனல் கக்கும் வீட்டிற்குள்ளே மாட்டிக்கொள்கின்றனர். 

வெட்டி வேர் தடுப்பு

படுக்கை அறையில் ஏ.சி. பொருத்தப்பட்டிருந்தாலும், சமையல் அறை வெப்பத்தின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கிறது. இதுபோன்ற சூழ்       நிலையை சமாளிக்க சில வழிமுறைகள் உள்ளன. இவைகளை செயல்படுத்தினால் கிராமத்து வாழ்க்கையுடன் இணைந்த மனதிருப்தி கிடைக்கும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம். 

தென்னை ஓலை, பனை ஓலை, வெட்டி வேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை வீட்டின் ஜன்னல்களிலும், பால்கனிகளிலும் தொங்கவிடலாம். இவை வீட்டின் உள்பகுதியை குளிர்ச்சியாக்குவதில் பங்கெடுத்துக்கொள்ளும். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். அதிலும் வெட்டிவேர் தடுப்பு திரைகள் நல்ல பலனை கொடுக்கும்.

மேல்தளத்தில் குளிர்தன்மை

 தனி வீட்டில் வசிப்பவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வெப்பம் உள் நுழையாத அளவிற்கு மேல் தள பகுதியை மாற்றி அமைக்கலாம். மாடியின் மேல் தளத்தில் நீரில் நனைத்த கோணிகளைப் பரப்பி வைக்கலாம். அதனுள் தென்னை நார்களை போட்டு வைக்கலாம். 

அவை தண்ணீரை தக்க வைத்து வீட்டின் உள்ளே வெப்பம் இறங்குவதை தடுக்க உதவும். அத்துடன், வீட்டின் மேல் மாடியில் தென்னங்கீற்றுகளால் கோடைக்காலம் முடியும்வரை நிரந்தரமாகப் பந்தல் போட்டு வைக்கலாம். மாலை வேளையில் மாடியின் தரையில் நன்றாகத் தண்ணீர்த் தெளித்துவிட்டு அமர்ந்தால் இதமாக இருக்கும்.

கூரை கொடுக்கும் குளிர்ச்சி

பொதுவாகவே கோபுரங்களை கொண்ட கட்டுமானங்களின் உள்ளே குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். இதற்குக் காரணம் கூரை உயரமாக இருப்பதுதான். அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் கூரையின் உயரத்தை 12 அடி இருக்கும் வகையில் அமைத்தால் வீட்டின் குளிர்ச்சிக்கு உத்தரவாதம் கிடைக்கும். அப்படி கட்டமைக்கப்பட்டிருக்காத வீட்டிற்கு மர தடுப்புகளை பயன்படுத்தலாம்.

இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் மொசைக் டைல்ஸ் அல்லது சலவைக் கற்களைப் பதித்துவிடுகிறார்கள். இவை கோடைக்காலத்திற்கு ஏற்றவையாக இல்லாவிட்டாலும், பெரும்பாலான மக்களின் விருப்ப தேர்வாக இருக்கின்றன. 

மர தடுப்புகள்

இதுபோன்ற வீடுகளில் சுவரையும் தரையையும் இணைக்கும் வகையில் மரத்தினாலான தடுப்பை ஏற்படுத்தி வெளிப்பகுதியில் இருந்து கடத்தப்படும் வெப்பத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். மேலும் கூரையின் பால்சீலிங் அமைப்பிலும் மாற்றம் செய்யலாம். கோடை காலத்திற்கு ஏற்ப மரத்திலான பால்சீலிங் அமைப்பை ஏற்படுத்தலாம். இவை வெப்பத்தை கட்டுப்படுத்துவதோடு உள் அலங்காரத்திலும் மாறுதலை ஏற்படுத்திக் கொடுக்கும். 

மேலும் வீட்டில் உள்ளே இருக்கும் வெப்பத்தை வெளியேற்ற எக்ஸாஸ்ட் பேன்களை பயன்படுத்தலாம். இத்தகைய பேன்களை முகப்பு அறையிலும், படுக்கை அறையிலும், சமையல் அறையிலும் பொருத்தலாம். அதன் மூலம் வீட்டின் ஜன்னல்களின் வழியாகக் குளிர்ச்சியான காற்று வீட்டின் உள்ளே பரவுவதற்கு வழிவகை ஏற்படும். 

வண்ணங்களில் மாற்றம்

கோடைக்காலத்தில் சுவர் வண்ணங்களிலும் மாறுதலை செய்ய வேண்டும். அடர்த்தியான வண்ணங்கள் இருந்தால் அதனை வெளிர்நிற வண்ணங்களாக மாற்றி அமைக்கலாம். அவை வெப்பத்தாக்கத்தை தடுப்பதோடு வெளிச்சத்தையும், குளிர்ச்சி தன்மையையும் ஏற்படுத்தி கொடுக்கும். 

புதிதாக வீடு கட்டுபவர்கள் மேல்பகுதியில் ஆற்று மணலை பரப்பி அஸ்திவாரம் அமைத்தால் தரையில் குளிர்ச்சி தன்மை வெளிப்பட வழிவகை பிறக்கும். அதன் மூலம் அறையின் வெப்ப நிலையும் குறையக்கூடும். ஜன்னல்கள் அதிகம் இடம் பெற செய்வதும் வெப்பத்தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு துணை புரியும்.


0 comment(s) to... “கோடை வெப்பத்தை விரட்டும் வழிமுறைகள்...”