தஞ்சை மாவட்டத்தில் 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை

Posted January 26, 2016 by Adiraivanavil in Labels:
தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 28-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடுப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகராஜர். அவர் மறைந்த புஷ்யபகுல பஞ்சமிதிதி அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி கரையோரம் அமைந்துள்ள அவரது சமாதியில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தியாகராஜரின் 169-வது ஆராதனை விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தியாகராஜருக்கு ஆராதனை வருகிற 28-ந்தேதி நடக்கிறது. 

அன்றைய தினம் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையொட்டி 28-ந்தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி(வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தும், அதற்கு பதிலாக அடுத்தமாதம்(பிப்ரவரி) 13-ந்தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. 

இந்த உள்ளூர் விடுமுறை அன்னிய செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சை மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


0 comment(s) to... “தஞ்சை மாவட்டத்தில் 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை”