பட்டுக்கோட்டை அருகே பூக்கடைக்குள் லாரி புகுந்தது டிரைவர் படுகாயம்

Posted March 10, 2016 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டை அருகே பூக்கடைக்குள் லாரி புகுந்து ஏற்பட்ட விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார்.கரூரில் இருந்து ஜல்லிக் கற்கள் ஏற்றிக் கொண்டு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு நேற்றுமுன்தினம் இரவு 2 மணிக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெரு நாடியம்மன் மண்டகப்படி அருகே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் வழக்கமான பாதையில் செல்லாமல் குறுக்கு வழியில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வேகமாக வந்தது. இதனால் மண்டகப்படி அருகே 4 ரோடு சந்திப்பில் லாரியும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருந்த நிலையில் லாரி டிரைவர் சாமர்த்தியமாக விபத்தை தவிர்க்க லாரியை திருப்பினார். இதனால் லாரி எதிர்பாராத வகையில் நாடியம்மன் மண்டகப்படிக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள தே.மு.தி.க பிரமுகர் முருகேசன் என்பவரது பூக்கடைக்குள் புகுந்து நின்றது. இந்த விபத்தில் கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணியன் (வயது 25) கால் உடைந்து படுகாயமடைந்தார். பூக்கடையும் அருகிலிருந்து மின்கம்பமும் பலத்த சேதம் அடைந்தது.

வழக்குப்பதிவு

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அக்கம்பக்கத்தினர் லாரி டிரைவர் சுப்பிரமணியனை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் முதலுதவி சிகிச்சைக்குப்பின் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அரசு பஸ் குறுக்கு வழியில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. பஸ்சிலிருந்த 6 பேர் லேசான காயம் அடைந்தனர். லாரி டிரைவர் பஸ்சில் மோதாமல் சாமர்த்தியமாக திருப்பி பூக்கடை மீது லாரியை மோதி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே பூக்கடைக்குள் லாரி புகுந்தது டிரைவர் படுகாயம்”