பேராவூரணி அருகே வாகன சோதனையில் ரூபாய் 37.5இலட்சம் பணம் பறிமுதல்

Posted March 17, 2016 by Adiraivanavil in Labels:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்தில் தேர்தல் கமிஷன் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில் ரூபாய் 37 இலட்சத்து ஐம்பதாயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

      திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் திருச்சிற்றம்பலம் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் பறக்கும்படை சிறப்பு தாசில்தார் துரைராஜ், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், அய்யப்பசாமி, காவலர் நித்தியானந்தம் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது பட்டுக்கோட்டையில் இருந்து ஆவணம் நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அவ்வாகனத்தில் இருந்து ரூபாய் 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது.
             உடனடியாக அப்பணத்தை கைப்பற்றிய தேர்தல் கமிஷன் பறக்கும்படை அலுவலர் இரவோடு இரவாக பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வந்து, பேராவூரணி வட்டாட்சியரும் தொகுதி தேர்தல் உதவி அலுவலருமான கோ.இரகுராமனிடம் ஒப்படைத்தார். ரூபாய் 500, 100 அடங்கிய நோட்டு கட்டுகள் உடனடியாக சாக்கு பையில் வைத்து சீலிடப்பட்டது. இந்நிலையில் செவ்வாய் கிழமை காலை பதினோரு மணியளவில் அந்த பணப்பையை வட்டாட்சியர் கோ.இரகுராமன், சிறப்பு தாசில்தார் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில்  பேராவூரணி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
        விசாரணையில் அந்த பணம் தனியார் ஏஜென்சி மூலம் வங்கிகளின் ஏடிஎம்மிற்கு கொண்டு செல்லப்பட்டது என தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததும், பாதுகாப்பு அதிகாரிகள் உடன் வராமலும், ஏஜென்சி வாகனத்தில் வராமல் சொகுசு வாகனத்தில் இரவு நேரத்தில் வந்ததும் பிரச்சினையானதாக கூறப்படுகிறது. வாகனத்தில் வந்த பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. உரிய ஆவணங்களை ஒப்படைத்து அதிகாரிகளிடம் முறையீடு செய்து பணத்தை திரும்ப பெறலாம் என அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. ரூபாய் 37.5 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.     


0 comment(s) to... “பேராவூரணி அருகே வாகன சோதனையில் ரூபாய் 37.5இலட்சம் பணம் பறிமுதல்”